ஜெயலலிதா மரணம் குறித்து விசாரணை கமிஷன் விசாரிக்கும் – ஓ.பி.எஸ் அதிரடி..!


தமிழக துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், டெல்லியில் இருந்து விமானம் மூலம் சென்னை வந்தார். விமான நிலையத்தில் அவர், நிருபர்களிடம் கூறியதாவது:-

பெட்ரோலிய பொருட்களை ஜி.எஸ்.டி.யில் இணைக்கவிடாமல் தமிழக அரசு எதிர்க்கவில்லை. ஜி.எஸ்.டி.யில் பெட்ரோலிய பொருட்களை இணைத்தால் விலை குறையும் என்று யார் சொன்னது?.

பெட்ரோல், டீசல் விலையை கச்சா எண்ணெய் விலைக்கு ஏற்ப எண்ணெய் நிறுவனங்கள்தான் நிர்ணயம் செய்வார்கள். மற்ற மாநிலங்களை ஒப்பிடும்போது தமிழக அரசின் வரிகள் குறைவாகத்தான் இருக்கிறது.

வன்முறையை தூண்டும் வகையில் யாரும் கருத்துக்களை தெரிவிக்கக்கூடாது. முன்னாள் அமைச்சர் நயினார் நாகேந்திரன் கூறிய கருத்துக்காக அவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு உள்ளது.

ஜெயலலிதா மரணம் குறித்து நீதி விசாரணை கமிஷன் அமைக்கப்பட்டு உள்ளது. நீதியரசர் ஆறுமுகசாமி விசாரித்துக்கொண்டு இருக்கிறார். விசாரணை முடிந்தபின்னர்தான் முழு விவரங்களும் தெரிய வரும். அதற்கு முன்னால் கருத்துகள் சொல்வது சரியாக இருக்காது. அது விசாரணைக்கு குறுக்கீடாக இருக்கும்.

எனவே ஜெயலலிதா மரணம் குறித்து விசாரணை கமிஷன் செயல்படுவதால் யாரும் கருத்துக்களை பதிவிட வேண்டாம். எம்.எல்.ஏ.க்கள் தகுதி நீக்கம் செய்யப்பட்ட வழக்கில் உரிய விளக்கம் அளிக்கப் படும்.

இவ்வாறு அவர் கூறினார்.-Source: maalaimalar

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!