பட்டப்பகலில் சலூன் கடைக்காரருக்கு நடந்த கொடூரம்..!


கரூரில் காதல் விவகாரத்தில் சலூன் கடை உரிமையாளரை குத்திக்கொலை செய்ததாக 3 பேரை போலீசார் கைது செய்தனர்.

கரூர் காமராஜபுரம் பகுதியை சேர்ந்தவர் ஜெயராம். இவரது மகன் ஹரிஹரன் (வயது 22). இவர் மாரியம்மன் கோவில் வீதியில் சொந்தமாக சலூன் கடை நடத்தி வந்தார். அதே பகுதியை சேர்ந்த இளம்பெண் ஒருவரை ஹரிஹரன் காதலித்தார். நேற்று கரூர் பசுபதீஸ்வரர் கோவில் அருகே அந்த பெண்ணுடன் ஹரிஹரன் பேசிக்கொண்டு இருந்தார். அப்போது அவர்கள் இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது.

இதுகுறித்து தகவல் அறிந்த அந்த பெண்ணின் உறவினர்கள் சிலர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து ஹரிஹரனை தாக்கினர். அவர்களது பிடியில் இருந்து ஹரிஹரன் தப்பி ஓட முயன்றுள்ளார். ஆனால் அவரை தாக்கியவர்கள் ஹரிஹரன் முதுகில் கத்தியால் குத்தினர். இதில் படுகாயம் அடைந்த ஹரிஹரனை அருகில் உள்ளவர்கள் மீட்டு கார் மூலம் கரூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அனுமதிக்கப்பட்ட அவர் சிறிது நேரத்தில் பரிதாபமாக உயிரிழந்தார்.

இதுகுறித்த புகாரின்பேரில், கரூர் டவுன் போலீஸ் இன்ஸ்பெக்டர் சிவசுப்பிரமணியன், ஹரிஹரனை தாக்கி கொலை செய்ததாக சங்கர், கார்த்திக், வெள்ளைசாமி ஆகிய 3 பேரை கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார். பட்டப்பகலில் அதுவும் மக்கள் நடமாட்டம் அதிகம் உள்ள கோவில் அருகே நடைபெற்ற இந்த கொலை சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.- source: maalaimalar

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!