கணவனை ஆள் வைத்து கொன்ற மனைவி! அதிர வைத்த காணம்..!


திருமணத்தை மீறிய உறவினால் கணவனை ஆள் வைத்து கொலை செய்த மனைவி உள்பட ஆறு பேர் கைதுசெய்யப்பட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

கடலூர் மாவட்டம் புதுச்சத்திரம், வில்லியநல்லூர் பகுதியில் 2020 டிசம்பர் 30ஆம் தேதி தனியார் நிறுவனத்துக்குச் சொந்தமான காலி இடத்தில் அடையாளம் தெரியாத சடலம் புதைக்கப்பட்டுள்ளதாக கிராம நிர்வாக அலுவலர் புதுச்சத்திரம் காவல் நிலையத்தில் புகாரளித்திருந்தார்.

இந்தப் புகாரின் பேரில் காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். சந்தேகத்துக்குரிய அந்த இடத்தினை புவனகிரி வருவாய் வட்டாட்சியர் மேற்பார்வையில் தோண்டி சோதனையிடப்பட்டது. அப்போது சுமார் 28 வயது மதிக்கத்தக்க ஆண் பிணம் கண்டெடுக்கப்பட்டது.
சம்பவ இடத்திலேயே தடய அறிவியல் நிபுணர்கள் சோதனை மேற்கொண்டனர். இது கொலையாக தான் இருக்க வேண்டும் என்று காவல் துறையினரின் விசாரணையில் சந்தேகம் எழ, குற்றவாளிகளைப் பிடிக்க மூன்று தனிப்படைகள் அமைக்கப்பட்டன.

தொடர்ந்து மேற்கொள்ளப்பட்ட விசாரணையில், இறந்து போனவர் சேத்தியாத்தோப்பு அருகேயுள்ள பெரிய நற்குணம் கிராமத்தைச் சேர்ந்த கருணாகரன் மகன் ஆசை(38) என்பது தெரியவந்தது.

இச்சூழலில், கொலை செய்யப்பட்ட ஆசையின் மனைவி தீபா, தனது கணவரை காணவில்லை என சேத்தியாத்தோப்பு காவல் நிலையத்தில் 2020 டிசம்பர் 21 அன்று புகார் கொடுத்திருப்பதும் தெரியவந்தது.

தொடர்ந்து நடத்தப்பட்ட விசாரணையில் கொலையுண்ட ஆசை என்பவரின் மனைவி தீபா மீது காவல் துறையினருக்கு சந்தேகம் வலுத்தது.

இதனையடுத்து தீபாவை காவல் நிலையம் அழைத்து வந்து விசாரணை செய்ததில் அவர் முன்னுக்குப்பின் முரணாக பதிலளித்துள்ளார். தொடர்ந்து காவல் துறையினர் மேற்கொண்ட கிடுக்குப்பிடி விசாரணையில், கணவனின் நண்பர் ஐயப்பன் என்பவருடன் கடந்த ஓராண்டுக்கு முன்பு திருமணத்திற்கு மீறிய உறவு வைத்திருந்தது அம்பலமானது.

இது கணவன் ஆசைக்கு தெரியவர, குடும்பத்தில் பிரச்னை தொற்றிக்கொண்டுள்ளது. எனவே தனது வெளிஉறவுக்கு தடங்கலாக இருக்கும் கணவனை தீர்த்துக்கட்ட தீபா, ஐப்பனுடன் சேர்ந்து திட்டம் தீட்டியுள்ளார். இதற்கு ஐயப்பனின் நண்பர்களும் உடன் சேர்ந்துள்ளனர்.

அத்திட்டத்தின்படி, 2020 டிசம்பர் 17 அன்று, ஒரத்தூர் காவல் சரகம் அருகேயுள்ள சாத்தமங்கலம் கிராமத்திற்கு ஆசையை அழைத்துச் சென்று, கூட்டாக மது அருந்தியுள்ளனர். அப்போது மது போதை உச்சத்தில் இருந்த ஆசையை, ஐயப்பனும் அவரது கூட்டாளிகளும் சேர்ந்து, தாங்கள் கொண்டு வந்து மறைத்து வைத்திருந்த கத்தி உள்ளிட்ட ஆயுதங்களால் சரமாரியாக குத்தி கொலை செய்துள்ளனர்.

பின்னர், உடலைப் புதைப்பதற்காக இரண்டு இருச்சக்கர வாகனங்கள், ஒரு கார் ஆகியவற்றை தயார் செய்த கொலையாளிகள், உடலை காரில் ஏற்றி, புதுச்சத்திரம் அருகேயுள்ள தனியார் அனல்மின் நிலையத்திற்குச் சொந்தமான இடத்தில் புதைத்துள்ளனர். புதைத்த இடத்தை யாரும் கண்டறியாமல் இருக்க, நர்சரி புல்களை வாங்கி புதைத்த இடத்தின் மீது பதித்துள்ளனர்.

திருமணத்திற்கு மீறிய உறவுக்கு தடையாக இருந்த கணவனை காதலனுடன் திட்டம் போட்டுக் கொன்றதை ஒப்புக்கொண்ட ஆசையின் மனைவி தீபா, காதலன் ஐயப்பன், சேத்தியாத்தோப்பு பகுதியைச் சேர்ந்த வினோத் என்கிற அராத்து, வண்டிக்கல் என்கிற கார்த்தி, மொட்டையன் என்ற அருண், ஒரு பதினேழு வயது சிறுவன் ஆகியோர் கைது செய்யப்பட்டு நீதிமன்ற காவலுக்கு அனுப்பப்பட்டனர்.

இந்தக் கொலைக்கு பயன்படுத்தப்பட்ட கார், 2 இருச்சக்கர வாகனங்கள், 2 கத்தி, ஒரு தலைக்கவசம், ஒரு மண்வெட்டி ஆகியன கொலையாளிகளிடம் இருந்து பறிமுதல் செய்யப்பட்டது.- source: daily.tamilnadu

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!