பிறந்தநாள் கொண்டாட்டத்தில் சோகம்… பிளஸ்-2 மாணவனை ராட்சத அலை இழுத்துச்சென்றது!


நண்பர்களுடன் பிறந்தநாள் கொண்டாடிவிட்டு கடலில் குளித்த பிளஸ்-2 மாணவனை ராட்சத அலை இழுத்துச்் சென்றது.

புதுவை தட்டாஞ்சாவடியை சேர்ந்தவர் பாலாஜி. வில்லியனூர் உள்ள தனியார் பள்ளியில் பிளஸ்-2 படித்து வருகிறார். இவருக்கு நேற்று பிறந்தநாள். இதை நண்பர் களுடன் கொண்டாட அவர் விருப்பப்பட்டார்.

இதற்காக பாலாஜி தன்னுடன் படிக்கும் பள்ளி நண்பர்களான முத்திரையர் பாளையம் ஞானசேகர் மகன் புவியரசன் (வயது 17) உள்பட 7 பேருடன் தவளக்குப்பத்தை அடுத்துள்ள புதுக்குப்பம் கடற்கரைக்கு சென்றார்.

ராட்சத அலை இழுத்துச்சென்றது
அங்கு பாலாஜி தனது நண்பர்களுடன் கேக் வெட்டி பிறந்த நாளை உற்சாகமாக கொண்டாடினார். பின்னர் அவர்கள் அனைவரும் ஆறும்-கடலும் இணையும் இடத்தில் இறங்கி குளித்தனர்.

அப்போது கடலில் எழுந்த ராட்சத அலை பாலாஜி, புவியரசன் ஆகியோரை வாரி சுருட்டிக்கொண்டு கடலுக்குள் இழுத்துச் சென்றது. இதைப்பார்த்த அவரது நண்பர்கள் அதிர்ச்சி அடைந்தனர். அவர்கள், காப்பாற்றுங்கள், காப்பாற்றுங்கள் என்று குரல் எழுப்பினர்.

இதை கேட்டு அங்கிருந்த மீனவர்கள் விரைந்து வந்தனர். அவர்கள் கடலுக்குள் குதித்து மாயமான 2 மாணவர்களையும் தேடினர். இதில் பாலாஜி உயிருடன் மீட்கப்பட்டார். அவர் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு, சிகிச்ைச அளிக்கப்பட்டு வருகிறது.

தேடும் பணி தீவிரம்
மாயமான புவியரசனை தேடும் பணியில் தவளக்குப்பம் போலீசார், உள்ளூர் மீனவர்கள் ஈடுபட்டு வருகிறார்கள். இதுபற்றி தகவல் அறிந்த புவியரசனின் பெற்றோர் கடற் கரைக்கு வந்தனர். அவர்கள் மகனின் நிலை என்ன என்று தெரியாமல் அழுதபடி இருந்தனர்.

இந்த சம்பவம் குறித்து தவளக்குப்பம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் இளங்கோ, உதவி சப்-இன்ஸ்பெக்டர் ரவி ஆகியோர் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். நண்பரின் பிறந்தநாள் கொண்டாட்டத்தில் மாணவர் கடலில் மூழ்கி மாயமானது சோகத்தை ஏற்படுத்தியது.- source: dailythanthi

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!