தலைக்கு இப்படி செய்து வந்தால் முடி உதிராது அடர்த்தியாகவும் வளரும் என தெரியுமா..?


அழகு என்பதில் கூந்தல் முக்கியப் பங்கு வகிக்கிறது. பிறக்கும் போது ஒருவரின் தலையில் சராசரியாக 1,20,000 முடிகள் இருக்கும். தினம் 100 முடிகள் வரை உதிர்வது சகஜமானது தான். கூந்தலை பராமரிப்பதற்கான எளிய முறைகளை காணலாம்.

கூந்தல் உதிர்வதற்கான காரணங்கள்

ஆரோக்கியமற்ற உணவு மற்றும் இரும்பு சத்து குறைவான உணவு பழக்க வழக்கம், மன உளைச்சல், கோபம், படபடப்பு, கூந்தலுக்கு அடிக்கடி செய்கிற கலரிங், ஸ்ட்ரெயிட்டனிங், பெர்மிங் சிகிச்சைகள், கூரிய முனைகள் கொண்ட சீப்பினால் தலை சீவுவது மற்றும் அழுக்கடைந்த சீப்பை பயன்படுத்துவது.

அளவுக்கதிகமான வெயில், உப்புக் காற்று, குளோரின் கலந்த நீர் மற்றும் சுற்றுப்புற மாசு.

முடி உதிர்வது நிற்க வேண்டுமா?

பெண்களுக்கு முடி கொட்டுவது தீராத பிரச்னையாக உள்ளது. முடி நன்கு வளர வேண்டுமானால், புரோட்டீன் சத்து அதிகம் உள்ள பொருட்களை உணவில் சேர்த்து கொள்ள வேண்டும். இச்சத்து குறைவதால் தான் முடி உதிர்கிறது.


முடி உதிர்வதை தடுக்க சில எளிய முறைகள்:

வாரம் ஒருமுறை முடக்கத்தான் கீரையை அரைத்து தலையில் தேய்த்து 5 நிமிடம் ஊறியதும் குளிக்கவும். இதுபோல் தொடர்ந்து மூன்று மாதகாலம் செய்து வந்தால், எந்த காரணத்தால் முடி கொட்டினாலும் நின்றுவிடும். அதோடு, இக்கீரை நரை விழுவதையும் தடுக்கும். முடியும் கருகருவென வளரும். இரவில் நெல்லிக்காய்களை தண்ணீரில் ஊறப்போட்டு, காலையில் அந்நீரில் எலுமிச்சம் பழத்தைப் பிழிந்து தலையில் தேய்த்து குளித்து வந்தால் முடி உதிர்வது நிற்கும். செம்பட்டை முடியும் நிறம் மாறும்.

தலைமுடி நன்றாக வளர கற்றாழைச் சாறில் எண்ணெய் கலந்து தலையில் தேய்க்கலாம். இப்படி செய்து வந்தால் முடி உதிராது அடர்த்தியாகவும் வளரும். தலையும் குளிர்ச்சியாக இருக்கும்.

நரைமுடி கருப்பாக வேண்டுமா?

பெரும்பாலானவர்களுக்கு சிறுவயதிலேயே நரைமுடி தோன்றிவிடுகிறது. சிலருக்கு வம்சா வளியாகவும் நரை வருவதுண்டு. கவலை, மனச்சோர்வு, டீ, காபி அதிகம் குடித்தல் போன்றவற்றால் பித்த நரை உண்டாகும். வைட்டமின் பி12 நரையை போக்கவல்லது.

மருதாணி இலையை நன்கு மைபோல் அரைத்து, அதில் எலுமிச்சம் பழச்சாறையும், வெந்தயம் பவுடர் இரண்டு ஸ்பூன் கலந்து கொள்ள வேண்டும். இக்கலவையை முதல் நாள் இரவே செய்து கொள்ள வேண்டும். காலையில் எழுந்ததும், இக்கலவையை அனைத்து முடிகளிலும் படும்படி நன்றாக தேய்த்து இரண்டு அல்லது மூன்று மணிநேரம் ஊறவைத்து பிறகு சிகைக் காய்த்தூள் தேய்த்து நல்ல தண்ணீரில் கழுவ வேண்டும். குறிப்பாக மருதாணியை போடுவதற்கு முன், தலையில் எண்ணெய் பசை இல்லாதவாறு பார்த்து கொள்ள வேண்டும்.


கறிவேப்பிலையை ஒருநாள் விட்டு ஒருநாள் துவையல் அரைத்து சாப்பிட வேண்டும். காபி, டீ குடிக்கும் பழக்கம் இருந்தால், படிப்படியாக குறைத்து அறவே நிறுத்தி விடவேண்டும்.

பொடுகு தொல்லையா?

பொடுகுதானே என அலட்சியமாக இருந்து விடாதீர்கள். தலைக்கு குளித்தபின் முடியை உலர்த்தாமல் இருந்தாலோ, அழுக்கான தலை முடியுடன் இருந்தாலோ மற்றும் அதிக உஷ்ணத்தினாலோ பொடுகு தோன்றுகிறது. பொடுகு வராமல் தவிர்க்க ஒருவர் பயன்படுத்திய சீப்பு, தலையணை, டவல் போன்றவற்றை கண்டிப்பாக பயன்படுத்தக் கூடாது.

நெல்லிமுள்ளி, வெந்தயம், சிறிது மிளகு இவற்றை ஊறவைத்து மைபோல அரைத்து தலையில் தடவி ஒரு மணிநேரம் ஊறிய பிறகு, நன்கு அலசினால் பொடுகு தொல்லை மறையும்.

நீலகிரி தைலத்தை சூடாக்கி தலையில் தடவி, வெந்நீரில் ஒரு பெரிய துவாலையை நனைத்து தலையில் கட்டி விடுங்கள். பிறகு நன்கு அலசி விடவும்.

தேங்காய் எண்ணெயுடன் சிறிது கற்பூரத்தை போட்டு வைத்து, அந்த எண்ணெயை தொடர்ந்து தேய்த்து வந்தால் பொடுகு மறைந்து விடும்.


பேன் தொல்லை நீங்க வேண்டுமா?

முடியில் அழுக்குகள் சேர்வதாலும், வியர்வை பெருக்கத்தாலும், பேன் உள்ளவர்கள் பயன்படுத்தும் சீப்பை உபயோகிப்பதன் மூலமும் பேன் தோன்றுகிறது. இதனுடைய முக்கியமான உணவுத் தலையில் உள்ள ரத்தம் தான்.

வசம்பை தண்ணீர் விட்டு அரைத்து, தலையில் நன்றாக தேய்த்து ஊறியதும் அலசினால் பேன் போகும். வேப்பிலை போட்டு கொதிக்க வைத்த தண்ணீரில் தலைமுடியை அலசினாலும் பேன் தொல்லை நீங்கும்.

கருந்துளசி இலைகளை தலையணையின் மேலே நன்றாக பரப்பி வைக்கவும். அதன்மேல் மெல்லிய துணியைப் போர்த்தி அத்துணியின் மேல் படுத்து உறங்கவும். இவ்வாறு செய்து வந்தால், எல்லா பேன்களும் இறங்கி ஓடி மறைந்து விடும். சத்தான உணவு இல்லாமல், எப்படிப்பட்ட விலை உயர்ந்த ஷாம்பு மற்றும் ஆயில்களை பயன்படுத்தினாலும் கூந்தல் வளர்ச்சியை அதிகரிக்க முடியாது. எனவே, உணவு பழக்கவழக்கத்தில் கூடுதல் கவனம் செலுத்துங்கள்.-Source: tamil.eenaduindia

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!