ஆசிரியை பின்தொடர்ந்து சென்று வெட்டிச்சாய்த்த கணவர்… பட்டப்பகலில் பயங்கரம்..!


ராமநாதபுரம் கலெக்டர் அலுவலக வளாகத்தில் ஆசிரியை படுகொலை செய்யப்பட்டார். அவரை பின்தொடர்ந்து சென்று வெட்டிச்சாய்த்த கணவரை போலீசார் கைது செய்தனர்.

ராமநாதபுரம் அருகே உள்ள தென்னம்பிள்ளை வலசை பகுதியை சேர்ந்தவர், மாசிலா மணி. இவருடைய மகன் சரவணன் (வயது 33). இவரும், ராமநாதபுரம் அருகே உள்ள பாண்டிக்கண்மாய் பகுதியை சேர்ந்த சிவபாலா (32) என்ற பெண்ணும் ராமநாதபுரம் கல்லூரியில் படித்த போது காதலித்தனர். பி்ன்னர் திருமணம் செய்துகொண்டனர். இவர்களுக்கு 2 பெண் குழந்தைகள், ஒரு ஆண் குழந்தை உள்ளனர்.

சரவணன் டிரைவராக ேவலை செய்து வந்தார். சிவபாலா ராமநாதபுரம் கலெக்டர் அலுவலக வளாகத்தில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் ஆசிரியையாக பணியாற்றி வந்தார். இவர்கள் ராமநாதபுரம் வ.உ.சி.நகர் பகுதியில் உள்ள வீட்டில் வசித்து வந்தனர்.

விவாகரத்து கேட்டு வழக்கு

இந்த நிலையில் கருத்து வேறுபாடு காரணமாக கணவன், மனைவி இருவரும் கடந்த சில மாதங்களாக பிரிந்து தனித்தனியாக வாழ்ந்து வந்தனர். அதன்படி சரவணன் தனது பெற்றோருடன் ஓம்சக்திநகர் பகுதியில் வசித்து வந்தார். சிவபாலா பரமக்குடி சந்தைக்கடை தெரு பகுதியில் வீடு வாடகைக்கு பிடித்து தனது குழந்தைகளுடன் வசித்து வந்தார். மேலும் அவர்கள் இருவரும் விவாகரத்து கேட்டு வழக்கு தொடர்ந்திருந்தனர். இந்த வழக்கு ராமநாதபுரம் குடும்ப நல கோர்ட்டில் நடைபெற்று வந்தது.

பின்தொடர்ந்தார்

இந்த வழக்கு விசாரணைக்காக சிவபாலா நேற்று காலை ராமநாதபுரம் கோர்ட்டுக்கு வந்தார். சரவணன் விசாரணைக்கு ஆஜராகாத நிலையில் அடுத்த மாதம் 5-ந் தேதி வழக்கு விசாரணை ஒத்தி வைக்கப்பட்டது.

இதனை தொடர்ந்து சிவபாலா கோர்ட்டில் இருந்து வெளியே வந்து, கலெக்டர் அலுவலக வளாக பகுதியில் உள்ள தான் வேலை பார்க்கும் பள்ளிக்கூடத்திற்கு செல்வதற்காக நடந்து சென்று கொண்டிருந்தார். அவர் கோர்ட்டில் இருந்து வெளியே வந்ததை அப்பகுதியில் மறைந்திருந்து சரவணன் நோட்டமிட்டார்.

தனது மனைவியை கொலை செய்ய வேண்டும் என்ற ேநாக்கத்தோடு வந்திருந்த அவர் சிவபாலாவுக்கு தெரியாமலேயே அவரை பின் தொடர்ந்தார்.

வெட்டிக்கொலை

கலெக்டர் அலுவலக வளாகத்தில் டி.ஐ.ஜி. அலுவலகத்தை தாண்டி சீதக்காதி சேதுபதி விளையாட்டு அரங்க வாசல் பகுதியில் சிவபாலா சென்றபோது, வேகமாக ஓடி வந்த சரவணன் தான் மறைத்து வைத்திருந்த அரிவாளால் சிவபாலாவை சரமாரியாக வெட்டினார். இதில் பலத்த காயம் அடைந்த அவர் ரத்த வெள்ளத்தில் கீழே விழுந்து சம்பவ இடத்திலேயே துடிதுடித்து பரிதாபமாக உயிரிழந்தார்.

இந்த சம்பவத்தை கண்டு அந்த பகுதியில் இருந்தவர்கள் அலறினர். இ்ந்த சத்தம் கேட்டு அங்கிருந்த போலீசார் ஓடி வந்தனர். இதைப் பார்த்த சரவணன் தப்பி ஓடினார். போலீசாரும் விடாமல் அவரை துரத்தினர். பின்னர் தடயவியல் போலீஸ் அலுவலகம் அருகில் வைத்து சரவணனை போலீசார் மடக்கி பிடித்து அவரை கைது செய்தனர்.

கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு ஜெயசிங், உதவி சூப்பிரண்டு அரவிந்த் மற்றும் போலீஸ் அதிகாரிகள் அங்கு விரைந்து சென்று விசாரணை செய்தனர். மேலும் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு கார்த்திக் சம்பவ இடத்தை பார்வையிட்டு விசாரணை மேற்கொண்டார். தடயவியல் நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு ரத்த சிதறல் மற்றும் தடயங்களை சேகரித்தனர். கொலைக்கு பயன்படுத்திய அரிவாளும் கைப்பற்றப்பட்டது.

பரபரப்பு

இந்த சம்பவம் தொடர்பாக ராமநாதபுரம் கேணிக்கரை போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். கொலை செய்யப்பட்ட சிவபாலாவின் உடலை பரிசோதனைக்கு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும், பிடிபட்ட சரவணனிடம் போலீசார் தீவிர விசாரணை செய்து வருகின்றனர். பட்டப்பகலில் கலெக்டர் அலுவலக வளாக பகுதியில் டி.ஐ.ஜி. அலுவலகம், மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகம் அருகில் ஆசிரியை, அவரது கணவராலேயே சரமாரியாக வெட்டிக்கொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

குழந்தைகள் தவிப்பு

ஆசிரியை சிவபாலாவுக்கு 3 குழந்தைகள் உள்ளனர். கணவரால் சிவபாலா கொல்லப்பட்டதால் அந்த 3 குழந்தைகளும் தற்போது பரிதவிக்கும் நிலை ஏற்பட்டது.- source: dailythanthi

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!