பேச மறுத்த காதலி… நண்பர்களுடன் சைக்கோ தனமான முடிவெடுத்த பாலாஜி..!


கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் அருகே இருளப்பபுரம் பகுதியைச் சேர்ந்தவர் சந்திரன்(62). இவர் தனது மனைவி மற்றும் மகன்களுடன் சண்டையிட்டு வீட்டைவிட்டு வெளியேறினார். பின்னர் அப்பகுதியில் கூலி வேலை செய்து வந்த இவர் இரவில் சாலையோர கடைகளில் உறங்கி வந்துள்ளார்.

வழக்கம்போல் கடந்த சனிக்கிழமை இரவு இருளப்பபுரம் சந்திப்பில் உள்ள சாலையில் படுத்து தூங்கிக் கொண்டிருந்தார். பின்னர் காலையில் அவர் பாதி எரிந்த நிலையில் சடலமாக கிடப்பதை கண்ட மக்கள் அதிர்ச்சி அடைந்து போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அங்கு விரைந்த போலீசார் அவரது உடலை மீட்டு விசாரணை நடத்தினர்.

இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து அந்த பகுதியில் உள்ள சிசிடிவி காட்சிகளை வைத்து விசாரணை மேற்கொண்டனர். அப்போது அங்கு குடிபோதையில் வந்த 5 இளைஞர்கள் முதியவரிடம் லைட்டர் வாங்கி பின்னர் அவர் மீதே தீ வைத்து எரித்துக் கொன்றது தெரிய வந்தது.

உடனே சிசிடிவி காட்சிகள் அடிப்படையில் அவர்களை போலீசார் தேடினர். அப்போது ஒரே இடத்தில் இருந்த 5 பேரையும் போலீசார் மடக்கி பிடித்தனர். விசாரணையில் அவர்கள் மதுரையை சேர்ந்தவர்கள் என்பதும், பாலாஜி, லங்கேஸ்வரன், பொன்ராஜ், லட்சுமணன் உட்பட 5 பேர் என்பதும் தெரியவந்தது.

அவர்களை கைது செய்து நடத்திய விசாரணையில் 5 பேரில் பாலாஜி என்பவர் ஒரு பெண்ணை காதலித்து வந்துள்ளார். திடீரென அந்த பெண் பாலாஜியிடம் பேசாததால் ஆத்திரத்தில் நண்பர்களுடன் மது அருந்தி விட்டு போதையில் சென்ற போது சாலையில் படுத்திருந்த முதியவரை கொலை செய்தது தெரிய வந்தது.

தொடர்ந்து அந்த இளைஞர்களை நீதிபதி முன்பு ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். காதலி பேச மறுத்ததால் சாலையில் உறங்கி கொண்டிருந்த முதியவரை எரித்துக் கொன்ற சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.- source: maalaimalar

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!