சினிமா பாணியில் வீடுபுகுந்து பெண்ணுக்கு அரிவாள் வெட்டு: ராமநாபுரத்தில் பயங்கரம்..!


ராமநாதபுரத்தில் சினிமா பாணியில் வீடுபுகுந்து பெண்ணை அரிவாளால் வெட்டி படுகொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ராமநாதபுரத்தை அடுத்த உச்சிப்புளி பகுதியைச் சேர்ந்தவர் செல்வராசு. ரியல் எஸ்டேட் தொழில் செய்து வருகிறார்.

இவரது வீட்டுக்கு எதிரே உச்சிப்புளி பகுதியில் ஓட்டல் நடத்திவரும் கணேசன் என்பவர் வாடகைக்கு குடிவந்துள்ளார்.

செல்வராசு தனது ஓமினி வேனை இரவில் தனது வீட்டு வாசலில் நிறுத்திவிட்டு காலையில் எடுத்துச்செல்வது வழக்கம்.

இந்நிலையில் எதிர்வீட்டில் வசிக்கும் கணேசன் அவரது பைக்கை வீட்டு வாசலில் நிறுத்துவதால் காரை எடுப்பதில் அவ்வப்போது தகராறு ஏற்பட்டு வந்துள்ளது.


வியாழக்கிழமை (நேற்று) இதே காரணத்தினால் இரு வீட்டாருக்கும் வாக்குவாதம் முற்றியதோடு இந்த விவகாரம் உச்சிப்புளி காவல் நிலையத்துக்கு சென்றுள்ளது. அங்கு போலீஸார் இருத்தரப்பையும் சமரசம் செய்து அனுப்பி வைத்துள்ளனர்.

இதன் காரணமாக நேற்று நள்ளிரவில் செல்வராசு வீட்டை சிலர் தட்டுவதைக்கண்டு அவரது மனைவி நம்புலெட்சுமி கதவை திறந்துள்ளார்.

அப்போது அரிவாள் உட்பட பயங்கர ஆயுதங்களுடன் வந்த 10-பேர் கொண்ட மர்ம கும்பல் அவரை சரமாரியாக வெட்டியுள்ளனர்.

அலறல் சத்தம் கேட்டு தடுக்க ஓடிவந்த செல்வராசு மற்றும் அவர்களது இரு மகன்களான செல்வக்குமார் மற்றும் துரைராஜ் ஆகியோரையும் தாக்கிய அந்த கும்பல் மின்னல் வேகத்தில் அங்கிருந்து தப்பிச்சென்றதாக கூறப்படுகிறது.

பின்னர் ரத்தவெள்ளத்தில் சரிந்த அனைவரையும் செல்வக்குமார் மற்றும் துரைராஜ் ஆகியோர் அரசு மருத்துவமனைக்கு கொண்டுவந்தனர்.

அங்கு நம்புலெட்சுமியை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக கூறினர். படுகாயமடைந்த செல்வராசு மற்றும் அவரது மகன்களான செல்வக்குமார் மற்றும் துரைராஜ் ஆகியோருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இந்த கொலை சம்பவம் தொடர்பாக உச்சிப்புளி போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

சின்ன விஷயத்துக்காக சினிமா பாணியில் வீடுபுகுந்து அரிவாளால் வெட்டிய சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.-Source: tamil.eenaduindia

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!