தூக்கத்திலிருந்த பிளஸ்-1 மாணவரின் உயிரைப் பறித்த தேள்..!


சின்னாளபட்டி அருகே தேள் கொட்டியதில் பிளஸ்-1 மாணவர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்துபோனார்.

திண்டுக்கல் மாவட்டம் சின்னாளபட்டி அருகே உள்ள ரெங்கசாமிபுரத்தை சேர்ந்தவர் சேவியர். அவருடைய மனைவி அமுதா. இவர்களது மகன் ஆண்டனி பிரபாகரன் (வயது 16). இவர், வெள்ளோட்டில் உள்ள அரசு உதவிபெறும் பள்ளியில் பிளஸ்-1 படித்து வந்தார். சேவியர் சேலத்தில் தங்கி கூலி வேலை செய்து வருகிறார். இதனால் அமுதா, தனது மகன் ஆண்டனி பிரபாகரனுடன் ெரங்கசாமிபுரத்தில் உள்ள வீட்டில் வசித்து வந்தார்.

இந்தநிலையில் நேற்று முன்தினம் இரவு தாயும், மகனும் வீட்டில் தூங்கி கொண்டிருந்தனர். அப்போது வீட்டுக்குள் புகுந்த தேள் ஒன்று ஆண்டனி பிரபாகரனை கடித்தது. இதனால் பதறிப்போன அமுதா தனது மகனை திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் சேர்த்தார். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி ஆண்டனி பிரபாகரன் பரிதாபமாக இறந்துபோனார். இதுகுறித்து அம்பாத்துரை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.- source: maalaimalar

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!