மருத்துவர்களின் அலட்சியத்தால் பறி போனது கர்ப்பிணி பெண்ணின் உயிர்..!


கர்ப்பிணி பெண்ணின் கருப்பையில் இறந்த குழந்தையை அகற்றுவதில் தனியார் மருத்துவமனை மருத்துவர்கள் அலட்சியம் காட்டியதால், அப்பெண் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் குடும்பத்தினரிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை செங்குன்றத்தை சேர்ந்தவர் சரத்பாபு. இவருடைய மனைவியான கனிமொழி கர்ப்பிணி என்பதால்,

சென்னை ஆர்கே சாலையில் உள்ள ருக்மணி பாய் என்ற மருத்துவரிடம் சிகிச்சை பெற்று வந்தார்.

கர்ப்பிணியாகி 10 மாதம் ஆகியதால், இந்த தம்பதி அந்த மருத்துவரை பார்க்க சென்றுள்ளனர். அப்போது அவர் குழந்தை நன்றாக உள்ளது, ஸ்கேன் எதுவும் எடுக்க தேவையில்லை என்று கூறியுள்ளார்.

இதையடுத்து கடந்த செவ்வாய் கிழமை ஸ்கேன் எடுத்து பார்த்த போது, குழந்தை கடந்த ஞாயிற்று கிழமையே இறந்துவிட்டது தெரியவர, அதிர்ச்சியடைந்த ருக்மணி பாய் உடனே, மயிலாப்பூர் லஸ் கார்னர் பகுதியில் உள்ள இசபெல்லா என்ற தனியார் மருத்துவமனைக்கு, அழைத்து சென்றுள்ளார்.

அங்கு, இறந்த குழந்தையை வெளியில் எடுக்குமாறு உறவினர்கள் விடுத்த கோரிக்கையை நிராகரித்த இசபெல்லா மருத்துவர்கள், குழந்தையை சுகப்பிரசவத்தில் எடுக்க முடியும் என்று கூறி நாட்களை கடத்தி வந்துள்ளனர்.

ஆனால் இறந்த குழந்தை காரணமாக தொற்று ஏற்பட்டு கனிமொழி இன்று காலை உயிரிழந்துவிட, இதைக் கேட்டு ஆத்திரமடைந்த உறவினர்கள் கனிமொழியின் உடலை வாங்க மறுத்து மருத்துவமனையின் முன்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

மேலும் சிகிச்சை கட்டணமாக 3 லட்சம் ரூபாயை கட்டச் சொல்லி மருத்துவமனை நிர்வாகம் வற்புறுத்தியதால், இதுகுறித்து வழக்கு பதிவு செய்துள்ள மயிலாப்பூர் போலீசார் உடற்கூறு ஆய்வு செய்த பின்னர் கனிமொழியின் உடல் உறவினர்களிடம் ஒப்படைக்கப்படும் என தெரிவித்தனர்.

மருத்துவமனை நிர்வாகத்திடம் விசாரணை நடத்தபடும் என்றும் போலீசார் சார்பில் உறுதியளிக்கப்பட்டதை தொடர்ந்து குடும்பத்தினர் போராட்டத்தை கைவிட்டுள்ளனர்.- source: daily.tamilnadu

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!