செல்போனில் சிக்கிய ஆதாரம்… சித்ராவின் கணவர் கைதானது எப்படி? போலீசார் தகவல்


டி.வி. நடிகை சித்ரா தற்கொலை விவகாரத்தில் தனது கணவர் ஹேம்நாத்தின் தந்தையிடம் சித்ரா புகார் தெரிவித்த செல்போன் ஆதாரத்தை வைத்து அவரை கைது செய்ததாக போலீசார் தெரிவித்துள்ளனர்.

டி.வி. நடிகை சித்ரா தற்கொலை செய்து கொண்ட விவகாரத்தில் அவரது கணவர் ஹேம்நாத் மீது தற்கொலைக்கு தூண்டியதாக போலீசார் வழக்குப்பதிவு செய்து அவரை கைது செய்து சிறையில் அடைத்தனர். ஆர்.டி.ஓ. விசாரணை மேற்கொள்ளப்பட்டுள்ள நிலையில் சித்ராவின் பெற்றோர் மற்றும் ஹேம்நாத்தின் பெற்றோரிடம் விசாரணை முடிவடைந்த நிலையில் சிறையில் இருக்கும் ஹேம்நாத்தை அழைத்து வந்து இன்று ஆர்.டி.ஓ. விசாரணை செய்ய உள்ளார்.


இந்த நிலையில் தற்போது புதிய தகவல் வெளியாகி உள்ளது. இதில் ஒரு பிறந்தநாள் விழாவுக்கு சென்றபோது சித்ராவுக்கும், ஹேம்நாத்துக்கும் காதல் மலர்ந்து பதிவு திருமணமும் நடைபெற்றது.

நாடகத்தில் நடித்து வந்த சித்ரா நெருக்கமான காட்சிகளில் நடிக்க ஆரம்பித்த போதுதான் ஹேம்நாத்துக்கு சந்தேகம் அதிகரிக்க ஆரம்பித்தது. மேலும் அது போன்று நெருக்கமான காட்சிகளில் தொடர்ந்து நடிக்கக் கூடாது என்று சித்ராவிடம் ஹேம்நாத் கூறி சண்டை போட்டதாக கூறப்படுகிறது. தற்கொலை செய்து கொண்ட சித்ரா ஹேம்நாத்தின் தந்தையிடம், ஹேம்நாத் தன்னை சந்தேகப்பட்டு கொடுமைப்படுத்தும் விஷயத்தை செல்போனில் கூறி வந்துள்ளார். அந்த ஆடியோ பதிவு அழிந்துள்ளதாகவும் அதனை சைபர் கிரைம் போலீசாருக்கு அனுப்பி வைத்தபோதுதான் தகவல் வெளியானது என போலீசார் தெரிவித்துள்ளனர்.


செல்போன் ஆதார அடிப்படையிலேயே ஹேம்நாத் மீது தற்கொலைக்கு தூண்டியதாக வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளதாக போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஹேம்நாத் ஏற்கனவே ஒரு பெண்ணை காதலித்து இருவரும் சுமூகமாக பிரிந்து விட்டனர் எனவும் போலீசார் தெரிவித்தனர்.- source: maalaimalar

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!