எனக்கும் சித்ராவுக்கும் திருமணம் முடிந்துவிட்டது – ஹேம்நாத் திடுக்கிடும் தகவல்!


சித்ரா தொடர்ந்து மன அழுத்தத்தில் இருந்து வந்ததாக ஹேம்நாத் தெரிவித்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

திருவான்மியூரை சேர்ந்த சின்னத்திரை நடிகை சித்ரா.(29). தொகுப்பாளினியாக தனது திரைப்பயணத்தை தொடங்கிய சித்ரா நடிகை, மாடலிங், டான்சர், பாடகர், உளவியலாளர், என பன்முகத் திறமைகளை வெளிப்படுத்தி வந்தார். இறுதியாக தனியார் தொலைக்காட்சி ஒன்றில் ஒளிப்பரப்பாகி வரும் பாண்டியன் ஸ்டோர்ஸ் என்ற சீரியலில் முல்லை என்ற கதாப்பாத்திரத்தில் நடித்து வந்தார்.

இவருக்கும் ஹேம்நாத் என்பவருக்கும் கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்பு திருமணம் நிச்சயிக்கப்பட்டுள்ளது. வரும் ஜனவரி மாதம் திருமணம் நடைபெறுவதாகவும் கூறப்பட்டது. இதைத்தொடர்ந்து சீரியலில் நடிப்பதற்காக சித்ரா சென்னை அருகேயுள்ள நாசரேத்பேட்டையில் உள்ள தனியார் விடுதியில் தங்கியிருந்துள்ளார். அவருடன் ஹேம்நாத்தும் தங்கி இருந்துள்ளார்.


இந்நிலையில் தூக்கிட்ட நிலையில் சித்ராவின் உடல் தனியார் விடுதி அறையிலிருந்து இன்று மீட்கப்பட்டது. சித்ராவின் முகத்தில் காயங்கள் இருந்ததால் போலீசார் பல கோணங்களில் சித்ராவின் மரணத்தை விசாரித்து வருகின்றனர். முதற்கட்டமாக சித்ராவின் அறையில் தங்கி இருந்த ஹேம்நாத்திடம் போலீசார் விசாரணையை தீவிரப்படுத்தியுள்ளனர்.

விசாரணையில் சித்ராவுக்கும், தனக்கும் இரண்டு மாதங்களுக்கு முன்பே பதிவு திருமணம் நடந்துவிட்டதாகவும், சித்ரா தொடர்ந்து மன அழுத்தத்தில் இருந்து வந்ததாகவும் ஹேம்நாத் தெரிவித்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளன. ஆனால் முறையான ஆவணங்களை காண்பித்தால் மட்டுமே திருமணம் தொடர்பான தகவலை உறுதி செய்ய முடியும் என போலீசார் தெரிவித்துள்ளனர். சித்ராவின் மரணம் கொலையா? தற்கொலையா? முகத்தில் காயம் ஏற்பட்டது ஏன்? தற்கொலை என்றால் காரணம் என்ன? குடும்ப பிரச்னையா? வேறு ஏதேனும் காரணமா? என்ற பல கோணத்தில் போலீசார் விசாரணையை தீவிரப்படுத்தியுள்ளனர்.- source: puthiya.thalaimurai

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!