மணமகளுக்கு தொற்று உறுதி – கொரோனா பாதுகாப்பு உடையுடன் கரம் பிடித்த மணமகன்


மணமகளுக்கு கொரோனா தொற்று உறுதியான நிலையில், ராஜஸ்தான் மாநிலத்தில் பாதுகாப்பு உடை அணிந்து ஜோடி ஒன்று திருமணம் செய்துகொண்டது.

ராஜஸ்தான் மாநிலம் ஷாபாத் நகரில் பரா பகுதியில் ஜோடி ஒன்று திருமணம் செய்துகொள்ள முடிவு செய்தது. அதற்கு முன்னதாக, மணமக்களுக்கு கொரோனா பாதிப்பு பற்றிய பரிசோதனை நடத்தப்பட்டது.

இதன் முடிவுகள் வெளியானதில், மணமகளுக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதியானது. எனினும், திருமணம் செய்துகொள்வதில் இருவரும் உறுதியாக இருந்துள்ளனர்.

இதையடுத்து, மணமக்கள் இருவரும் கொரோனா தடுப்புக்கான தனிநபர் பாதுகாப்பு உடைகளை அணிந்து கொண்டனர். அதன்பின் இருவரும் சடங்குகளை முறையாகப் பின்பற்றி திருமணம் செய்துகொண்டனர்.

அவர்களுக்கு திருமணம் நடத்தி வைத்த நபரும் தனிநபர் பாதுகாப்பு உடைகளை அணிந்து கொண்டார். இந்த நிகழ்ச்சியில் மணமகன் பாரம்பரிய தலைப்பாகை மற்றும் கையுறைகளை அணிந்து கொண்டார். இதேபோல் மணமகளும் முக கவசம் மற்றும் கையுறைகளை அணிந்தபடி காணப்பட்டார்.

கொரோனா பாதுகாப்பு விதிமுறைகளை கடைப்பிடித்து இந்த ஜோடி திருமணம் செய்து கொண்டது. இவர்களின் இந்த திருமணம் பற்றிய வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.- source: maalaimalar

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!