பாலைவனத்தில் மர்ம உலோக தூண் மாயம்…. அதிர்ச்சியில் உலக மக்கள்..!


பாலைவனத்தின் நடுவே உலோக தூண் ஒன்று மர்மமான முறையில் நிலைநிறுத்தப்பட்டிருந்த நிகழ்வு சமீபத்தில் பரபரப்பை ஏற்படுத்திருந்தது.

அமெரிக்காவின் யூட்டா மாகாணத்தில் உள்ள பாலைவன பகுதியில் கடந்த 18-ம் தேதி வனத்துறை அதிகாரிகள் ஹெலிகாப்டர் மூலம் ஆய்வு செய்துகொண்டிருந்தனர். அப்போது அந்த பாலைவன பகுதியின் மையத்தில் பளபளப்பான வெளிச்சத்தில் ஒரு உலோகத்தூண் நிறுவப்பட்டிருந்ததை கண்டு அதிர்ச்சியடைந்தனர்.

இது குறித்து உள்ளூர் அதிகாரிகளுக்கு தகவல் கொடுக்கப்பட்டது. இதையடுத்து, அந்த உலோகம் நிறுவப்பட்டிருந்த பாலைவன பகுதியை அதிகாரிகள் நேரில் ஆய்வு செய்தனர்.

அப்போது பாலைவனத்தில் யாரும் இல்லாத இடத்தில் மர்மமான முறையில் 12 அடி உயரம் கொண்ட சில்வர் உலோகத்திலான தூண் நிறுவப்பட்டிருந்ததை கண்டுபிடித்தனர். இந்த தூணை யார் நிறுவியது, எப்படி இந்த தூண் இங்கு கொண்டுவரப்பட்டது என எந்த விவரமும் அதிகாரிகளுக்கு தெரியவில்லை.


கொரோனா உள்பட பல்வேறு பிரச்சனைகள் 2020-ம் ஆண்டு உலக மக்களுக்கு மறக்கமுடியாத ஆண்டாக அமைய காரணமான நிலையில் பாலைவனத்தின் நடுவே உலோக தூண் மர்மமான முறையில் செங்குத்தாக நிலைநிறுத்தப்பட்டிருந்த சம்பவம் 2020-ம் ஆண்டை இறுதி பகுதியை மேலும் பதற்றம் அடைய செய்தது.

இந்த புகைப்படம் சமூகவலைதளத்தில் பரவத்தொடங்கியதையடுத்து
உலகம் முழுவதிலும் இருந்தும் பலர் இது எலியன்கள் பூமிக்கு வருவதான அறிகுறி உள்பட பல்வேறு கதைகளை இணைய தளத்தில் பரப்பி வந்தனர். இதற்கிடையில், பாலைவனத்தின் நடுவே உலோக தூண் யாரால் நிறுவப்பட்டிருக்கும் என்பது குறித்து அதிகாரிகள் விசாரணை நடத்த திட்டமிட்டிருந்தனர்.

இந்நிலையில், உலக மக்களை பரபரப்பாகும் வகையில் மர்மமான முறையில் நிறுவப்பட்டிருந்த உலோக தூண் தற்போது மர்மமான முறையில் மாயமாகியுள்ளது. அந்த உலோக தூண் நேற்று இரவு மாயமாகியுள்ளது.

அந்த தூணை நாங்கள் நீக்கவில்லை என்றும் வேறு யாரோ எடுத்து சென்றது என்றும் கூறியுள்ள யூட்டா மாகாண நில மேலாண்மை அதிகாரிகள் உலோக தூணை வெட்டி எடுத்து சென்றது யார் என்ற விவரம் தெரியவில்லை என்று தெரிவித்துள்ளனர்.

அந்த பாலைவனப்பகுதி தனியாருக்கு சொந்தமானது என்பதால் இது குறித்து விசாரணை நடத்த ஊள்ளூர் போலீசார் முடிவு செய்துள்ளதாக யூட்டா நில மேலாண்மை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

மர்மமான முறையில் நிறுவப்பட்டிருந்த உலோக தூண் மர்மமான முறையிலேயே மாயமாகியுள்ளதால் அமெரிக்கா மட்டுமல்லாலம் உலகின் பல்வேறு நாடுகளை சேர்ந்த மக்களும் குழப்பத்தில் ஆழ்ந்துள்ளனர்.- source: maalaimalar

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!