பிரசவத்திற்கு வந்த பெண்ணின் வயிற்றில் டாக்டர்கள் செய்த அதிர வைத்த சம்பவம்


விஜயாப்புராவில் பிரசவத்தின் போது பெண்ணின் வயிற்றில் துணியை வைத்து டாக்டர்கள் தைத்து உள்ளனர். அந்த துணி தற்போது 6 மாதங்களுக்கு பிறகு அறுவை சிகிச்சை செய்து அகற்றப்பட்டு உள்ளது.

விஜயாப்புரா மாவட்டம் முத்தேபிகாலை சேர்ந்தவர் ஷாகின் உத்னால்(வயது 28). இவருக்கு திருமணம் முடிந்து விட்டது. இந்த நிலையில் கடந்த 6 மாதங்களுக்கு முன்பு நிறைமாத கர்ப்பிணியாக இருந்த ஷாகினுக்கு திடீரென பிரசவ வலி ஏற்பட்டது. இதனால் அவர் பிரசவத்திற்காக விஜயாப்புரா டவுனில் உள்ள மாவட்ட அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு இருந்தார். அங்கு அவருக்கு டாக்டர்கள் அறுவை சிகிச்சை மூலம் பிரசவம் பார்த்தனர். இதில் ஆண் குழந்தை பிறந்து இருந்தது.

இதையடுத்து ஒரு வாரம் சிகிச்சைக்கு பின்னர் தாயும், சேயும் நலமாக இருப்பதாக கூறி ஷாகினையும், அவரது குழந்தையையும் டாக்டர்கள் டிஸ்சார்ஜ் செய்து இருந்தனர். இந்த நிலையில் கடந்த 2 மாதங்களாக ஷாகின் அடிக்கடி வயிற்று வலியால் அவதிப்பட்டு வந்தார். இதற்காக அவர் பல்வேறு மருத்துவமனைகளில் சிகிச்சையும் பெற்றார். ஆனால் அவருக்கு வயிற்று வலி சரியாகவில்லை.

இதனால் கடந்த ஒரு வாரத்திற்கு முன்பு வயிற்றில் கட்டி எதுவும் உள்ளதா? என்பதை கண்டறிய ஷாகின் ஸ்கேன் எடுத்தார். அப்போது அவருக்கு அதிர்ச்சி காத்து இருந்தது. அதாவது ஷாகினின் வயிற்றுக்குள் துணி வைத்து தைக்கப்பட்டு இருந்தது கண்டறியப்பட்டது. பிரசவத்தின் போது வெளியேறிய ரத்தத்தை துடைக்க டாக்டர்கள் துணியை பயன்படுத்தியதும், அந்த துணியை வயிற்றில் வைத்து டாக்டர்கள் தைத்து விட்டதும் தெரிந்தது.

இதுகுறித்து ஷாகின், டாக்டர்களிடம் சென்று முறையிட்டார். அப்போது கவனக்குறைவால் இதுபோன்று நடந்து விட்டதாக, ஷாகினிடம், டாக்டர்கள் வருத்தம் தெரிவித்தனர். மேலும் அறுவை சிகிச்சை மூலம் துணியை அகற்றுவதாகவும் டாக்டர்கள் கூறினர். அதன்படி ஷாகினியின் வயிற்றில் வைத்து தைத்த துணியை தற்போது அறுவை சிகிச்சை மூலம் டாக்டர்கள் அகற்றியுள்ளனர். ஆனாலும் கவனக்குறைவாக செயல்பட்ட டாக்டர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று ஷாகினின் உறவினர்கள், மருத்துவ அதிகாரிக்கு கோரிக்கை விடுத்து உள்ளனர்.- source: maalaimalar

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!