தொலைபேசியும், மின்சாரமும் இல்லாமல் வாழும் அதிசய மனிதர்!!!


நவீன உலகில், தொலைபேசி மற்றும் மின்சாரம் இல்லாமல் வாழ்வது மிகவும் கடினம். அப்படி வாழ்வது இயலாத காரியம் என்ற நிலையிலேயே நம்மில் பலர் இருக்கிறோம்.

அதற்கு அடிமையாகவுள்ள மக்களிடையே, மின்சாரம் மற்றும் தொலைபேசி என்றாலே எனக்கு ஒத்துவராது என்று கூறுகிறார் பிரித்தானியாவைச் சேர்ந்த புருனோ ஃ பாரிக்.

பிரித்தானியாவில் , நார்த்தம்டன்ஷையரிலுள்ள ரோத்வெல்லில் வாழும் 48 வயதான புருனோவுக்கு மின்சாரம் மற்றும் தொலைபேசி கதிர்வீச்சினால் ஏற்படும் ஒருவித ஒவ்வாமையுள்ளது.

அவர் எலக்ட்ரோ மேக்னடிக் ஹைபர்சென்சிட்டிவிட்டி நோயால் பாதிக்கப்பட்டுள்ளார். நான்கு ஆண்டுகளுக்கு முன்பு வரை நல்ல ஆரோக்கியத்துடன் இருந்த புருனோ, தற்போது வெறும் 31 கிலோ கிராமாக எடை குறைந்துள்ளார்.

இந்த ஒவ்வாமை காரணமாக, வெளி உலகத்துக்கு வர பயந்து, ஒரு கைதியைப் போலவே வீட்டுக்குள் முடங்கிக் கிடக்கிறார் புருனோ.

இதுகுறித்து புருனோ, ’நான் உங்களைப் போல் சாதாரண வாழ்க்கையைத்தான் வாழ்ந்தேன். மேலும் நான் ஒரு கிரேஹவுண்ட் (Greyhound ) பயிற்சியாளராக வேலை செய்து கொண்டிருந்தேன், எனக்கு மூன்று குழந்தைகள் உள்ளனர். தொலைக்காட்சியிலும் பத்திரிக்கைகளிலும் உள்ளவர்கள், எங்களை ’5 ஜி இடியட்ஸ் என்று அழைக்கிறார்கள். அவர்களுக்கு தெரியாது.

என் முன் ஒரு தொலைபேசி அல்லது மின்சார உபகரணம் வைத்தால் எனக்கு என்ன நடக்கிறது என்று. மின் சாதனங்கள் மற்றும் தொலைபேசி சிக்னல்கள் மனிதர்களைப் பாதிக்காது என்று யாராலும் சொல்ல முடியாது, நான் வாழும் ஆதாரமாக இருக்கின்றேன்.” என்று சோகத்துடன் கூறியுள்ளார்.

தனக்கிருக்கும் நோயைக் கண்டறிய புருனோ, அமெரிக்கா, ஜேர்மனி உள்ளிட்ட பல்வேறு நாடுகளுக்கும் சுற்றி 2 லட்சம் யூரோ வரை செலவு செய்துள்ளார் என்பது தான் சோகத்திலும் சோகம்.- source: thinakkural

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!