மரணத்திலும் இணைபிரியா தம்பதி.. கணவர் உடலின் மீது விழுந்து மனைவியும் மரணம்..!


தஞ்சை அருகே கணவர் இறந்த அதிர்ச்சியில் மனைவியும் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

தஞ்சையை அடுத்த பள்ளியக்ரஹாரத்தில் உள்ள அகிலாம்பாள்பேட்டையை சேர்ந்தவர் செல்வம்(வயது 78). இவருடைய மனைவி மின்னல்கொடி(68). இவர்களுக்கு ரமேஷ் என்ற மகன். ஜெயலட்சுமி, சித்ரா என்ற 2 மகள்கள். இதில் ரமேஷ் கடந்த 2005-ம் ஆண்டு நடந்த விபத்தில் இறந்து விட்டார். மகள்கள் 2 பேருக்கும் திருமணம் ஆகி விட்டது.

பள்ளியக்ரஹாரத்தில் செல்வமும், மின்னல்கொடியும் வசித்து வந்தனர். லாரி கிளீனராக இருந்த செல்வம், கடந்த சில மாதங்களாக உடல்நலம் பாதிக்கப்பட்டு தஞ்சை மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வீடு திரும்பினார். அவரை மின்னல்கொடி உடன் இருந்து கவனித்து வந்தார்.

இந்த நிலையில் நேற்று மின்னல்கொடி எழுந்து காபி எடுத்துச்சென்று கணவரை எழுப்பியபோது அவர் இறந்துவிட்டது தெரிய வந்தது.

இதனால் அதிர்ச்சி அடைந்த மின்னல்கொடி மயங்கி கணவர் மீது விழுந்தார். இதில் அவரும் சம்பவ இடத்திலேயே இறந்தார். இதையடுத்து 2 பேரின் உடல்களும் எடுத்துச்செல்லப்பட்டு அடக்கம் செய்யப்பட்டன.

கணவர் இறந்த அதிர்ச்சியில் மனைவியும் இறந்த சம்பவம் அந்த பகுதியில் மிகுந்த சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.- source: maalaimalar

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!