திடீரென வேறு சிறைக்கு மாற்றப்பட்ட காசியும் – தந்தையும்..!


நாகர்கோவில் ஜெயிலில் அடைக்கப்பட்டு இருந்த காசியும், அவருடைய தந்தையும் பாளையங்கோட்டையில் உள்ள மத்திய சிறைக்கு திடீரென மாற்றப்பட்டனர்.

நாகர்கோவில் கணேசபுரம் மெயின் ரோட்டை சேர்ந்த தங்கப்பாண்டியன் மகன் காசி (வயது 27). இவர் பெண்களிடம் ஆசை வார்த்தைகள் கூறி ஆபாசமாக படம் பிடித்து அதை காட்டி மிரட்டி பணம் பறித்ததாக 6 பாலியல் வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. அதோடு ஒரு கந்து வட்டி வழக்கும் பதிவாகி உள்ளது. இந்த வழக்குகள் தொடர்பாக சி.பி.சி.ஐ.டி. போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.

காசி மீது கடைசியாக சென்னை மாணவி ஒருவர் அளித்த புகாரின் பேரில், அவரை சி.பி.சி.ஐ.டி. போலீசார் 5 நாட்கள் காவலில் எடுத்து விசாரணை நடத்தினர். பின்னர் அவரை கோர்ட்டில் ஆஜர்படுத்தி கடந்த 11-ந் தேதி மீண்டும் நாகர்கோவிலில் உள்ள மாவட்ட ஜெயிலில் அடைத்தனர்.

போலீஸ் காவலில் விசாரணை நடத்தியபோது காசி குமரி, நெல்லை, கடலூர், சென்னை, பெங்களூரு, மும்பை பகுதிகளைச் சேர்ந்த பெண்களை காதலிப்பதாகக்கூறி ஆபாச படம் எடுத்தது தெரிய வந்தது. இதுதொடர்பாக சம்பந்தப்பட்ட பெண்களிடம் இருந்து புகார்கள் பெற்று மேலும் வழக்குகள் பதிவு செய்ய போலீசார் முடிவு செய்துள்ளனர். மேலும் காசிக்கு உடந்தையாக இருந்த 2 பேரையும் போலீசார் தேடி வருகிறார்கள். அதைத்தொடர்ந்து கோர்ட்டில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்வதற்கான நடவடிக்கைகளையும் சி.பி.சி.ஐ.டி. போலீசார் தொடங்கியுள்ளனர்.

இதற்கிடையே நாகர்கோவிலில் உள்ள மாவட்ட சிறையில் அடைக்கப்பட்டு இருந்த காசி, அவருடைய தந்தை தங்கப்பாண்டியன் உள்ளிட்ட 5 பேரை திடீரென பாளையங்கோட்டையில் உள்ள மத்திய சிறைக்கு மாற்றினர். அதேபோல் நேற்றும் 54 பேர் நாகர்கோவிலில் உள்ள மத்திய சிறையில் இருந்து பாளையங்கோட்டை சிறைக்கு மாற்றப்பட்டுள்ளனர்.- source: maalaimalar

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!