தோழியுடன் சென்ற 18 வயது ஆண் நண்பரருக்கு நடந்த கொடூரம்..!


டெல்லியில் தோழியுடன் சென்ற 18 வயது ஆண் நண்பரை இளம்பெண்ணின் குடும்பத்தினரே அடித்துக்கொன்ற சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தலைநகர் டெல்லியின் அதர்ஷ் நகரை சேர்ந்த 18 வயது இளைஞன் ராகுல் ராஜ்புத். இவர் அப்பகுதியில் உள்ள ஒரு கல்லூரியில் பிஏ இரண்டாம் ஆண்டு கல்வி பயின்று வந்தார். மேலும், இவர் தனது வீட்டில் டியூசன் கற்றுக்கொடுத்தும் வந்தார்.

இதற்கிடையில், ராகுல் ராஜ்புத்திற்கும் அதே பகுதியில் வசித்துவரும் ஒரு இளம்பெண்ணுக்கும் நட்பு ஏற்பட்டுள்ளது. ஆனால், ராகுலின் நட்பு அந்த இளம்பெண்ணின் குடும்பத்தினருக்கு பிடிக்கவில்லை.

ஆனால், தனது தோழியுடன் ராகுல் தொடர்ந்து நட்பில் இருந்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த அந்த இளம்பெண்ணின் சகோதரன் உள்பட குடும்ப உறுப்பினர்கள் சிலர் கடந்த 7-ம் தேதி இரவு அதர்ஷ் நகர் தெருவில் தனது தோழியுடன் சென்ற ராகுலை இடை மறித்துள்ளனர். மேலும், ராகுல் ராஜ்புத்திடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனர்.

அப்போது ராகுல் ராஜ்புத்திற்கும் அவரது தோழியின் உறவினர்களுக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. அப்போது அந்த இளம்பெண்ணின் உறவினர்கள் ராகுல் ராஜ்புத்தை கடுமையாக தாக்கியுள்ளனர்.

இந்த தாக்குதலில் படுகாயமடைந்த ராகுலை அக்கம்பக்கத்தினர் மீட்டு அருகில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். ஆனால், படுகாயமடைந்த ராகுல் சிகிச்சை பலனின்றி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சிலமணி நேரங்களில் உயிரிழந்தார்.

இந்த சம்பவம் தொடர்பாக கொலை வழக்குப்பதிவு செய்த போலீசார் இளம்பெண்ணின் சகோதரன் முகமது ராஜ் (20) மற்றும் உறவினர்கள் அன்வர் ஹசன் (20) உள்பட மொத்தம் 5 பேரை கைது செய்தனர். மேலும், கைது செய்யப்பட்ட நபர்களிடம் தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருவதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.

இதற்கிடையில், உயிரிழந்த இளைஞன் ராகுலின் தந்தையை சந்தித்து ஆறுதல் கூறிய டெல்லி துணைமுதல்மந்திரி மணீஷ் சிசோடியா, இந்த சம்பவத்தில் தொடர்புடைய அனைவருக்கும் உரிய தண்டனை கிடைக்க டெல்லி அரசு தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளும் என உறுதியளித்தார். மேலும், உயிரிழந்த ராகுலின் குடும்பத்திற்கு டெல்லி அரசு சார்பில் ரூ.10 இழப்பீடு வழங்கினார்.- source: maalaimalar

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!