மனைவி கொடூரமாக கொலை – போலீசுக்கு பயந்து கணவர் விபரீத முடிவு..!


சேத்தியாத்தோப்பு அருகே கத்தியால் குத்தி பெண் கொலை செய்யப்பட்டார். அவரை கொன்ற கணவர், போலீசுக்கு பயந்து தற்கொலை செய்து கொண்டார். இந்த பரபரப்பு சம்பவம் குறித்து போலீஸ் தரப்பில் கூறப்பட்டதாவது:-

சேத்தியாத்தோப்பு அடுத்த ஆயிப்பேட்டை கிராமத்தை சேர்ந்தவர் தங்கவேல் (வயது 55). இவரது மனைவி செல்வராணி(45). இவர்களுக்கு வேல்முருகன் என்ற மகன் உள்ளார். கடந்த சில நாட்களாக கணவன்-மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்ததாக தெரிகிறது. இதற்கிடையே வேல்முருகன் தனது மனைவியுடன் பெரியப்பட்டில் உள்ள மாமியார் வீட்டுக்கு சென்றார்.

இந்த நிலையில் நேற்று காலை தங்கவேல்-செல்வராணி இடையே மீண்டும் தகராறு ஏற்பட்டது. இதனால் ஆத்திரமடைந்த தங்கவேல், வீட்டில் இருந்த கத்தியை எடுத்து மனைவி என்றும் பாராமல் செல்வராணியை சரமாரியாக குத்தினார். இதில் அவரது தலை, கழுத்து உள்ளிட்ட இடங்களில் கத்திக் குத்து விழுந்தது. ரத்த வெள்ளத்தில் சரிந்து விழுந்த அவர், சம்பவ இடத்திலேயே துடி துடித்து பரிதாபமாக இறந்தார்.

இதையடுத்து போலீசார் எப்படியும் தன்னை கைது செய்து விடுவார்கள் என்று பயந்த தங்கவேல், தற்கொலை செய்து கொள்ள முடிவு செய்தார். அதன்படி வீட்டில் இருந்த விஷத்தை எடுத்து அவர் குடித்து விட்டார். இதில் மயங்கி விழுந்த தங்கவேல், சிறிது நேரத்தில் உயிரிழந்தார்.

இதற்கிடையில் நீண்டநேரமாகியும் வீட்டில் இருந்து யாரும் வெளியே வராததை அறிந்த பக்கத்து வீட்டை சேர்ந்தவர்கள், அவரது வீட்டுக்குள் சென்று பார்த்தனர். அங்கு தங்கவேல், செல்வராணி ஆகிய 2 பேரும் பிணமாக கிடந்ததை கண்டு அவர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.

இதுகுறித்த தகவலின் பேரில் சேத்தியாத்தோப்பு துணை போலீஸ் சூப்பிரண்டு சுந்தரம், சப்-இன்ஸ்பெக்டர் ராமதாஸ், ஒரத்தூர் சப்-இன்ஸ்பெக்டர் அபு இப்ராஹீம் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று இருவரது உடல்களையும் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக சிதம்பரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இது குறித்து வேல்முருகன் அளித்த புகாரின் பேரில் ஒரத்தூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மனைவியை கத்தியால் குத்திக் கொலை செய்து விட்டு கணவரும் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.- source: maalaimalar

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!