கணவரை கொன்று உடலை 28 மணிநேரம் படுக்கையின் கீழே மறைத்து வைத்த மனைவி..!


தினமும் அடித்து, உதைத்து துன்புறுத்திய கணவரை கொன்று உடலை படுக்கையின் கீழே 28 மணிநேரம் மறைத்து வைத்த மனைவியை போலீசார் கைது செய்துள்ளனர்.

ராஜஸ்தானின் சுரு மாவட்டத்தில் ஹமீர்வாஸ் நகரில் சங்கத்தல் என்ற கிராமத்தில் வசித்து வந்தவர் நிர்மல் சிங். இவரது மனைவி நீரஜ். இந்த தம்பதிக்கு 2 குழந்தைகள் உள்ளனர்.

நிர்மல் சிங் தினமும் இரவில் தனது மனைவியை அடித்து, உதைத்து துன்புறுத்தி வந்துள்ளார். ஒவ்வொரு நாளும் இரண்டு பேருக்கும் இடையே சண்டை நடந்து வந்துள்ளது.

இந்நிலையில் கடந்த ஞாயிறு இரவு இருவருக்கும் இடையே மீண்டும் வாக்குவாதம் ஏற்பட்டு உள்ளது. இதில், ஆத்திரமுற்ற நீரஜ், கயிறு ஒன்றால் கணவரின் கழுத்தில் இறுக்கியதில் நிர்மல் உயிரிழந்து விட்டார். இதனால் பயந்துபோன அவரது மனைவி, நிர்மலின் உடலை படுக்கையின் கீழே மறைத்து வைத்து விட்டார்.

இதன்பின்பு நிர்மலை தேடி அவரது வீட்டுக்கு அண்ணன் அசோக் சிங் ஜாட் வந்துள்ளார். 28 மணிநேரத்திற்கு மேலாக மறைத்து வைக்கப்பட்டு இருந்த உடலில் இருந்து துர்நாற்றம் வீசியுள்ளது. இதன்பின்னரே நிர்மல் கொல்லப்பட்ட விவரம் தெரிய வந்துள்ளது. இதுபற்றி போலீசில் புகார் அளிக்கப்பட்டது. அவர்கள் உடலை கைப்பற்றி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

நிர்மலின் பிரேத பரிசோதனை நடந்து முடிந்து அவரது குடும்பத்தினரிடம் உடல் ஒப்படைக்கப்பட்டது. கொல்லப்பட்ட நிர்மலின் மனைவி நீரஜ் போலீசாரால் கைது செய்யப்பட்டு விசாரணைக்கு கொண்டு செல்லப்பட்டு உள்ளார். அவரிடம் தீவிர விசாரணை நடந்து வருகிறது.- source: dailythanthi

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!