போதையில் கணவன்.. சந்தேகத்தால் அரங்கேறிய பயங்கரம் -குழந்தைகள் அனாதையான சோகம்!


போதையில், மனைவியை சரமாரி வெட்டி கொன்று விட்டு, கணவர் தூக்கு மாட்டி தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.குமரி மாவட்டம் குருந்தன்கோடு அருகே உள்ள உண்ணங்குளம் பகுதியை சேர்ந்தவர் ராஜசேகர் (43). தேங்காய் வெட்டும் தொழிலாளி. இவரது மனைவி தங்கம் (37). இவர்களது மகன் ராகுல் (10), மகள் தன்சியா (9). இவர்கள் தற்போது ஆசாரிவிளை பகுதியில் வாடகை வீட்டில் வசித்து வந்தனர். ராஜசேகருக்கு குடிப்பழக்கம் இருந்துள்ளது. இதனால் தினமும் குடித்துவிட்டு வந்து மனைவியுடன் தகராறு செய்து வந்துள்ளார். மேலும் வீட்டு செலவுக்கும் பணம் தருவதில்லையாம். தங்கம்தான், அந்த பகுதியில் உள்ள ஒரு முந்திரி ஆலையில் வேலைக்கு சென்று குடும்பத்தை காப்பாற்றி வந்துள்ளார். அந்த வேலைக்கும் செல்லக்கூடாது என்று ராஜசேகர் தனது மனைவியை அடித்து உதைத்துள்ளார்.

வழக்கம் போல் நேற்று இரவும் போதையில் வந்து மனைவியிடம், ராஜசேகர் தகராறு செய்தார். பின்னர் அனைவரும் தூங்க சென்றனர். குழந்தைகளை தனி அறையில் படுக்க வைத்து விட்டு, வீட்டின் மற்றொரு அறையில் ராஜசேகரும், தங்கமும் தூங்கி ெகாண்டு இருந்தனர்.இன்று அதிகாலை 1.15 மணியளவில் எழுந்த ராஜசேகர், திடீரென மனைவியிடம் தகராறு செய்தார். அப்போது ஆத்திரத்தில் வீட்டில் இருந்த அரிவாளை எடுத்து தங்கத்தை சரமாரியாக வெட்டினார். இந்த அலறல் சத்தம் கேட்டு வீட்டின் மற்றொரு அறையில் தூங்கி கொண்டு இருந்த குழந்தைகள் எழுந்து வந்து கூச்சலிட்டனர். குழந்தைகள் கதறியும் கேட்காமல் அவர்கள் கண் முன்னாலேயே சரமாரியாக வெட்டினார். இதில் சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் துடிதுடித்து தங்கம் இறந்தார். இதை பார்த்ததும் குழந்தைகள் அலறி கொண்டு பக்கத்து வீட்டுக்கு சென்று கதறினர்.

அக்கம் பக்கத்தினர் ஓடி வந்து பார்த்த போது, வீட்டுக்குள் ராஜசேகரை காணவில்லை. எனவே அவர் தப்பி ஓடி இருப்பார் என தேடிய போது, வீட்டின் பின்புற பகுதியில் உள்ள ஒரு அறையில் ராஜசேகர் தூக்கில் பிணமாக தொங்கி கொண்டு இருந்தார். மனைவியை வெட்டி கொலை செய்து விட்டு, நேராக சென்று ராஜசேகரும் தற்கொலை செய்தது தெரிய வந்தது. தகவலறிந்த போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து கணவன், மனைவி இருவரின் உடல்களையும் மீட்டு பிரேத பரிசோதனைக்காக ஆசாரிபள்ளம் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இது குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தினமும் கணவர் அடித்து உதைப்பதால், போதையில் அவர் வீட்டுக்குள் வந்ததும் பக்கத்து வீட்டுக்கு குழந்தைகளுடன் தங்கம் சென்று விடுவார். பின்னர் கணவர் தூங்கிய பின் தான் மீண்டும் வீட்டுக்கு வருவார். நேற்று இரவும் கணவர் தகராறு செய்ததும் வெளியே சென்ற தங்கம், கணவர் உறங்கிய பின் தான் வீட்டுக்குள் வந்துள்ளார். ஆனால் அதிகாலையில் விழித்த ராஜசேகர், கொலை வெறியில் மனைவியை வெட்டி கொன்றுள்ளார்.- source: maalaimalar

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!