மின்னல் தாக்கி 2 பெண் தொழிலாளர்களுக்கு நடந்த பரிதாபம்..!


ஆண்டிப்பட்டி அருகே மின்னல் தாக்கி 2 பெண் தொழிலாளர்கள் பரிதாபமாக இறந்தனர்.

தேனி மாவட்டம் கண்டமனூர் வடக்கு தெருவை சேர்ந்தவர் நாகராஜ். இவருடைய மனைவி போதுமணி (வயது 42). அதேபகுதியை சேர்ந்த பெரியமுருகன் மனைவி வள்ளியம்மாள் (44), பிச்சைமணி மனைவி நாகம்மாள் (43). இவர்கள் 3 பேரும் ஆண்டிப்பட்டி அருகே வைகை அணையை ஒட்டியுள்ள அரப்படிதேவன்பட்டியில் உள்ள தோட்டத்தில் மிளகாய் பறிக்கும் வேலைக்காக நேற்று சென்றனர்.

பின்னர் சக தொழிலாளர்களுடன் சேர்ந்து அவர்கள் மிளகாய் பறிப்பில் ஈடுபட்டனர். அப்போது வானில் திடீரென கருமேகங்கள் சூழ்ந்தது. தொடர்ந்து மின்னல் வெட்டியது. சிறிது நேரத்தில் மழை பெய்யத்தொடங்கிவிடும் என்று நினைத்த தொழிலாளர்கள் வேகமாக மிளகாய் பறிக்கும் பணியில் ஈடுபட்டனர்.

அப்போது யாரும் எதிர்பாராதவிதமாக தொழிலாளர்கள் மீது மின்னல் தாக்கியது. இதில் போதுமணியும், வள்ளியம்மாளும் உடல் கருகி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தனர். நாகம்மாள் படுகாயமடைந்தார். மற்ற அனைவரும் காயமின்றி உயிர் தப்பினர். பின்னர் அவர்கள் படுகாயங்களுடன் உயிருக்கு போராடிக்கொண்டிருந்த நாகம்மாளை மீட்டு தேனி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர்.

இதற்கிடையே சம்பவம் குறித்து தகவலறிந்து தோட்டத்துக்கு வந்த க.விலக்கு போலீசார் போதுமணி, வள்ளியம்மாள் ஆகியோரின் உடல்களை கைப்பற்றி பிரேத பரிசோதனைக் காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மின்னல் தாக்கி 2 பெண் தொழிலாளர்கள் இறந்த சம்பவம் கண்டமனூர் பகுதி மக்களை சோகத்தில் ஆழ்த்தியது.- source: dailythanthi

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!