கல்யாணமாகி 3 நாளில் புதுமாப்பிள்ளை விபரீத முடிவு.. அதிர வைத்த காரணம்..!


திருமணமான 3 நாளில் புதுமாப்பிள்ளை தற்கொலை செய்து கொண்டது தொடர்பாக பெண்ணின் பெற்றோர் மீது தற்கொலைக்கு தூண்டியதாக வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

கோவை பேரூர் அடுத்த சென்னூரை சேர்ந்தவர் கோவிந்தராஜ் (வயது28). இவரும் அதே பகுதியை சேர்ந்த மஞ்சுளா(20) என்பவரும் காதலித்து வந்தனர்.

இவர்களது காதலுக்கு பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்தனர். அதனையும் மீறி இருவரும் காதல் கலப்பு திருமணம் செய்து கொண்டனர். இதற்கிடையே பெண்ணின் பெற்றோர் மகளை காணவில்லை என கொடுத்த புகாரின் பேரில் போலீசார் இருவரையும் அழைத்து விசாரித்தனர்.

அப்போது மஞ்சுளாவின் பெற்றோர் கோவிந்தராஜை தகாத வார்த்தைகளால் திட்டி விட்டு தங்களது மகளை தங்களுடன் அழைத்து சென்றனர்.

இதனால் மனவேதனை அடைந்த கோவிந்தராஜ் வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். அவரது உடல் பிரேத பரிசோதனை செய்யப்பட்டு கோவை அரசு ஆஸ்பத்திரியில் வைக்கப்பட்டிருந்தது.

இதற்கிடையே கோவிந்தராஜ் தற்கொலைக்கு காரணமான பெண்ணின் தாய், தந்தை, போத்தனூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஆகியோர் மீது நடவடிக்கை எடுக்க கோரி அவரது உறவினர்கள் நேற்று 2-வது நாளாக போராட்டத்தில் ஈடுபட்டனர்.

அவர்களிடம் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது இந்த வழக்கில் உரிய நடவடிக்கை எடுத்தால் மட்டுமே உடலை வாங்குவோம் என்றனர். இதையடுத்து பேரூர் போலீசார் மஞ்சுளாவின் தாய், தந்தை ஆகியோர் மீது தற்கொலைக்கு தூண்டியதாக வழக்குப்பதிவு செய்தனர். அதன்பின்னரே கோவிந்தராஜின் உடலை அவரது உறவினர்கள் வாங்கி சென்றனர்.- source: maalaimalar

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!