கிரைண்டர் கல்லை தலையில் போட்டு வாலிபருக்கு நடந்த கொடூரம்..!


கூடங்குளம் அருகே கிரைண்டர் கல்லை தலையில் போட்டு வாலிபர் படுகொலை செய்யப்பட்டார். மதுபோதையில் இந்த வெறிச்செயலில் ஈடுபட்ட அவரது நண்பரை போலீசார் வலைவீசி தேடிவருகிறார்கள்.

நெல்லை மாவட்டம் கூடங்குளம் அருகே உள்ள அடங்கார்குளம் கிராமத்தைச் சேர்ந்தவர் குணசேகரன் மகன் சுகந்தன் (வயது 25), கூலி தொழிலாளி. இவருடைய மனைவி தேவி. இவர்களுக்கு சுபத்ரா (1) என்ற பெண் குழந்தை உள்ளது.

கூடங்குளம் அருகே மேல சிவசுப்பிரமணியபுரத்தைச் சேர்ந்தவர் முருகன் (42). கூலி தொழிலாளியான இவர் திருமணமாகி, மனைவியை பிரிந்து தனியாக வசித்து வருகிறார். இவரும், சுகந்தனும் ஒன்றாக சேர்ந்து வேலைக்கு செல்வது வழக்கம். இதனால் அவர்கள் நண்பர்களாக பழகி வந்தனர்.

நேற்று முன்தினம் இரவில் சுகந்தன், மேல சிவசுப்பிரமணியபுரத்தில் உள்ள முருகனின் வீட்டுக்கு சென்றார். பின்னர் அங்கு 2 பேரும் ஒன்றாக அமர்ந்து மது குடித்தனர். அப்போது மதுபோதையில் அவர்களுக்கு இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.

இதில் ஆத்திரம் அடைந்த முருகன் உருட்டு கட்டையால் சுகந்தனை சரமாரியாக தாக்கினார். மேலும் வீட்டில் இருந்த கிரைண்டர் கல்லை தூக்கி சுகந்தனின் தலையில் போட்டதாகவும் கூறப்படுகிறது. இதில் பலத்த காயம் அடைந்த சுகந்தன் சம்பவ இடத்திலேயே துடிதுடித்து ரத்த வெள்ளத்தில் பரிதாபமாக உயிரிழந்தார்.

இந்த வெறிச்செயலில் ஈடுபட்ட முருகன் அங்கிருந்து தப்பி ஓடி விட்டார். இதுகுறித்து உடனடியாக கூடங்குளம் போலீஸ் நிலையத்துக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு மணிவண்ணன், இன்ஸ்பெக்டர் வனஜா ராணி மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று பார்வையிட்டு விசாரணை நடத்தினர். கொலை செய்யப்பட்ட சுகந்தனின் உடலைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக பாளையங்கோட்டை ஐகிரவுண்டு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தார்கள்.

இந்த கொலை தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து, தலைமறைவான முருகனை வலைவீசி தேடி வருகின்றனர். மேலும், சுகந்தன் கொலையில் வேறு யாருக்கேனும் தொடர்பு உள்ளதா? என்பது குறித்தும் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள். இந்த சம்பவத்தால் அந்த பகுதியில் பலத்த போலீஸ் பாதுகாப்பும் போடப்பட்டு உள்ளது.

கூடங்குளம் அருகே கிரைண்டர் கல்லை தலையில் போட்டு வாலிபர் படுகொலை செய்யப்பட்ட பயங்கர சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.- source: maalaimalar

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!