காதல் மனைவி பிரிந்ததால் புதுமாப்பிள்ளை எடுத்த விபரீத முடிவு..!


காதல் திருமணம் செய்த 3 நாட்களில், மனைவியை பிரிந்த சோகத்தில், புதுமாப்பிள்ளை தற்கொலை செய்துகொண்டார். அவரின் உடலை வாங்க மறுத்து உறவினர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

கோவை பேரூர் அடுத்த சென்னனூரை சேர்ந்தவர் கோவிந்தராஜ் (வயது 28). இவரும், அதே பகுதியை சேர்ந்த மஞ்சுளா (20) என்பவரும், 4 மாதங்களாக காதலித்து வந்தனர். இதற்கு பெற்றோர் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். இந்த நிலையில், கடந்த, 5-ந் தேதி, பெற்றோரை எதிர்த்து அவர்கள் 2 பேரும் திருமணம் செய்து கொண்டனர். 3 நாட்களாக, கணவன்-மனைவி இருவரும் ஒன்றாக வசித்து வந்தனர்.

இந்த நிலையில், கடந்த, 7-ந் தேதி, மஞ்சுளாவின் பெற்றோர், பேரூர் மகளிர் போலீசில் புகார் செய்தனர். அதன்பேரில் போலீசார், கோவிந்தராஜ் மற்றும் மஞ்சுளாவை அழைத்து விசாரணை செய்தனர். முடிவில் மஞ்சுளா, கணவனுடன் சேர்ந்து வாழ விருப்பம் இல்லை என தெரிவித்து, பெற்றோருடன் சென்று உள்ளார்.

இந்த நிலையில், திருமணமான 3 நாட்களில் மனைவியை பிரிந்த சோகத்தில் இருந்த கோவிந்தராஜ், நேற்று அதிகாலை வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து தகவல் அறிந்த பேரூர் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினார்கள்.

பின்பு அவர்கள் கோவிந்தராஜ் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அத்துடன் இது குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். இது குறித்து தகவல் அறிந்த கோவிந்தராஜ் உறவினர்கள் கோவை அரசு ஆஸ்பத்திரி முன்பு திரண்டனர்.

பின்னர் அவர்கள் கோவை கலெக்டர் அலுவலகம் முன்பு வந்தனர். அப்போது அவர்கள் கோவிந்தராஜின் தற்கொலைக்கு காரணமாக இருந்த, பெண்ணின் உறவினர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் அதுவரை கோவிந்தராஜின் உடலை வாங்க மாட்டோம் என கூறி, அங்கு அமர்ந்து சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

இது குறித்து தகவல் அறிந்த போலீசார், சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார்கள். உரிய நடவடிக்கை எடுக்க பரிந்துரை செய்யப்படும் என்று உறுதியளித்தனர். இதையடுத்து அவர்கள் மறியலை கைவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர்.- source: maalaimalar

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!