தனியார் பள்ளி ஆசிரியை கத்தியால் குத்தி கணவர் செய்த வெறிச்செயல்..!


நடத்தை சந்தேகத்தில் கணவரால் தனியார் பள்ளி ஆசிரியை கத்தியால் குத்திக் கொலை செய்யப்பட்டார்.

புதுச்சேரி வேல்ராம்பட்டு திருமாள் நகர் 4-வது குறுக்கு தெருவை சேர்ந்தவர் விஜயன் (வயது 58). சுல்தான்பேட்டை அரசு பள்ளி ஆசிரியர். முதல் மனைவி இறந்து விட்ட நிலையில் 2-வதாக சாந்தி என்பவரை திருமணம் செய்து கொண்டார். இவர் வேல்ராம்பேட்டில் ஒரு தனியார் பள்ளியில் ஆசிரியையாக பணியாற்றி வந்தார்.

இவர்களது மகன் கடலூரில் உள்ள தனியார் கல்லூரியிலும், மகள் அரசு என்ஜினீயரிங் கல்லூரியிலும் படித்து வருகின்றனர்.

இந்தநிலையில் 52 வயதான தனது மனைவியின் நடத்தையில் விஜயனுக்கு சந்தேகம் ஏற்பட்டது. இதுதொடர்பாக கணவன்-மனைவிக்கு இடையே அடிக்கடி தகராறு இருந்து வந்தது.

கத்தியால் குத்திக் கொலை

நேற்று முன்தினம் லாஸ்பேட்டையில் உள்ள உறவினர் வீட்டிற்கு மகள் சென்று விட்டார். மகன் நேற்று காலை 5.30 மணிக்கு எழுந்து கிரிக்கெட் விளையாட சென்று விட்டார். இந்தநிலையில் வீட்டில் இருந்த விஜயனுக்கும், சாந்திக்கும் பிரச்சினை ஏற்பட்டது. அப்போது அவர்கள் வாக்குவாதம் செய்ததில் விஜயன் ஆத்திரமடைந்தார்.

உடனே அவர் வீட்டில் இருந்து ஒரு துணியை எடுத்து மனைவி சாந்தியின் காலை கட்டிப் போட்டார். பின்னர் அவரது கழுத்தில் கத்தியால் விஜயன் குத்தினார். இதில் அவர் துடிதுடித்து சிறிது நேரத்தில் ரத்த வெள்ளத்தில் பரிதாபமாக இறந்து போனார். இதனை தொடர்ந்து செய்வதறியாமல் தவித்த விஜயன் தனது மனைவியை கொலை செய்ய பயன்படுத்திய கத்தியை எடுத்துக்கொண்டு இருசக்கர வாகனத்தில் முதலியார்பேட்டை போலீஸ் நிலையத்திற்கு சென்றார். அங்கு பணியில் இருந்த போலீசாரிடம் தனது மனைவியை கத்தியால் குத்திக் கொலை செய்து விட்டதாக கூறி சரண் அடைந்தார். அவரிடம் இருந்து கத்தியை போலீசார் பறிமுதல் செய்தனர்.

பின்னர் அவரை கொரோனா பரிசோதனைக்காக கதிர்காமம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

ஆவணங்கள் எரிப்பு

இதன்பின் முதலியார்பேட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் சுரேஷ்பாபு மற்றும் போலீசார் சம்பவம் நடந்த வீட்டுக்குச் சென்று பார்வையிட்டனர். அப்போது அங்கு பல்வேறு ஆவணங்கள் தீவைத்து கொளுத்தப்பட்டு இருந்தது தெரியவந்தது. இதன்பின் அங்கிருந்து சாந்தியின் பிணத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கதிர்காமம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு போலீசார் அனுப்பி வைத்தனர்.

தந்தையால் தாய் கொலை செய்யப்பட்ட சம்பவம் பற்றி அறிந்து சாந்தியின் மகன், மகள் உடனடியாக வீடு திரும்பினர். தாயாரின் உடலைப் பார்த்து அவர்கள் கதறி அழுதது பரிதாபத்தை ஏற்படுத்தியது.- source: dailythanthi

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!