இளவரசரின் காரில் தொடர்ந்து வசிக்கும் பறவைகள் – குஞ்சுகள் பறக்கும் நிலையிலும் அங்கேயே தஞ்சம்..!


துபாய் பட்டத்து இளவரசரின் காரில் கூடுகட்டி, முட்டையிட்டு, குஞ்சு பொறித்து வளர்ந்துவிட்ட நிலையிலும் அந்த பறவைகள் தொடர்ந்து அங்கிருந்து செல்லாமல் குடியிருந்து வருகிறது.

கடந்த சில மாதங்களுக்கு முன்பாக கொரோனா பாதிப்பு காலங்களில் துபாய் பட்டத்து இளவரசர் மேதகு ஷேக் ஹம்தான் பின் முகம்மது பின் ராஷித் அல் மக்தூம் வெளியிடங்களுக்கு செல்வதை தவிர்த்து வந்தார். அப்போது அவர் அடிக்கடி பயன்படுத்தும் கருப்பு நிற ‘மெர்சிடஸ்’ காரின் முகப்பு பகுதியில் சிறிய பறவை ஒன்று கூடு வைத்து முட்டையிட்டது.

அதன் பிறகு அதில் அமர்ந்து அடை காக்க தொடங்கியது. இதனை பார்த்த பட்டத்து இளவரசர் அந்த வாகனத்தை பயன்படுத்தாமல் விட்டு விட்டார். மேலும் கூட்டை கலைக்கும் விதமாக அந்த வாகனத்தை சுற்றி பணியாளர்கள் யாரும் சென்றுவிடக்கூடாது என்பதற்காக எச்சரிக்கை செய்யும் சிவப்பு நிற டேப்பை நான்கு புறத்திலும் சுற்றி வைத்தார்.

அதில் அந்த பறவை தனது முட்டைகளை காரின் முகப்பு பகுதியில் அடைகாத்து வந்தது. ஒரு சிறு பறவைக்காக தனது காரையே அளித்த பட்டத்து இளவரசரின் செயல் சமூக வலைத்தளங்களில் வரைலாகி பாராட்டுகளை பெற்றது.


இந்த நிலையில் கடந்த ஆகஸ்டு மாத தொடக்கத்தில் அந்த பறவை தான் அடை காத்த முட்டைகளில் இருந்து 2 குஞ்சுகள் வெளியே வந்தது. அதையும் பட்டத்து இளவரசர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் மகிழ்ச்சியுடன் பகிர்ந்து கொண்டார்.

இன்று அந்த குஞ்சுகள் வளர்ந்து பறக்கும் நிலையில் உள்ளன. தாய் பறவை தொடர்ந்து உணவை தேடி தன் குஞ்சுகளுக்கு அளித்து வருகிறது. நாட்கள் கடந்தாலும் அந்த காரின் முகப்பு பகுதிலேயே தனது வசிப்பிடத்தை அமைத்துக்கொண்டு அகலாமல் மகிழ்ச்சியுடன் பறவை குஞ்சுகள் விளையாடி வருகின்றன.

தொடர்ந்து அகலாமல் காரிலேயே வசிக்கும் பறவைகளை பார்த்து பலர் ஆச்சரியப்பட்டு செல்கின்றனர்.-source: maalaimalar

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!