ஒருதலைக் காதலால் விபரீத முடிவு எடுத்த என்ஜினீயர்..!


ஒருதலையாக காதலித்த பெண்ணை திருமணம் செய்து வைக்காததால் ஆத்திரமடைந்த என்ஜினீயர், தனது பெற்றோரை அரிவாளால் வெட்டிவிட்டு தற்கொலை செய்துகொண்டார். இந்த சம்பவம் கம்பத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தேனி மாவட்டம் கம்பம் சின்னவாய்க்கால் தெருவில் வசித்து வருபவர் முருகேசன் (வயது 60). இவர், போலீஸ் சப்-இன்ஸ்பெக்டராக பணியாற்றி ஓய்வுபெற்றவர். அவருடைய மனைவி இந்திராதேவி. இவர்களுக்கு மனோஜ் (25) என்ற மகன் இருந்தார். என்ஜினீயரான இவர், அதே பகுதியை சேர்ந்த இளம்பெண்ணை ஒருதலையாக காதலித்து வந்தார்.

இதற்கிடையே அந்த பெண்ணுக்கு வேறொருவருடன் திருமணம் நிச்சயம் செய்யப்பட்டது. இதனால் மனோஜ், மனம் உடைந்து காணப்பட்டார். மேலும் அந்த பெண்ணை தனக்கு திருமணம் செய்து வைக்குமாறு தனது பெற்றோரிடம் மனோஜ் வற்புறுத்தினார். ஆனால் அதற்கு அவர்கள் மறுப்பு தெரிவித்ததாக கூறப்படுகிறது.

இந்தநிலையில் வழக்கத்திற்கு மாறாக நேற்று அதிகாலையிலேயே எழுந்த மனோஜ், வீட்டில் இருந்து வெளியே செல்ல முயன்றார். இதை பார்த்த முருகேசன், அவரை தடுத்து நிறுத்தி இந்த நேரத்தில் எங்கே போகிறாய்? என்று கேட்டார். இதில் ஆத்திரமடைந்த மனோஜ், வீட்டில் கிடந்த அரிவாளை எடுத்து தந்தை என்று பாராமல் முருகேசனை வெட்டினார். இதனை பார்த்த அவரது தாய் இந்திராதேவி தடுக்க முயன்றார். அப்போது அவருக்கும் அரிவாள் வெட்டு விழுந்தது. பின்னர் வீட்டில் உள்ள அறைக்கு சென்ற மனோஜ் உள்பக்கமாக பூட்டிக் கொண்டார். இதற்கிடையே அரிவாள் வெட்டில் காயமடைந்த முருகேசன், தனது மனைவியை அழைத்து கொண்டு கம்பத்தில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்ந்தார். மேலும் இதுதொடர்பாக கம்பம் தெற்கு போலீசாருக்கு அவர் தகவல் தெரிவித்தார்.

அதன்பேரில் முருகேசன் வீட்டிற்கு சென்ற போலீசார், மனோஜ் இருந்த அறையை திறக்க முயன்றனர். ஆனால் கதவு உள்புறமாக பூட்டப்பட்டிருந்ததால் திறக்கமுடியவில்லை. இதையடுத்து அறையின் கதவை உடைத்து போலீசார் உள்ளே நுழைந்தனர். அப்போது மனோஜ் இடுப்பில் அணியும் ‘பெல்டால்’ கழுத்தை இறுக்கி தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது.

இதையடுத்து மனோஜின் உடலை போலீசார் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கம்பம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். மேலும் இதுதொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். பெற்றோரை அரிவாளால் வெட்டிவிட்டு என்ஜினீயர் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் கம்பத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.- source: maalaimalar

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!