காதலி பேச மறுப்பு… வாலிபர் எடுத்த விபரீத முடிவு…!

ராஜாக்கமங்கலம் அருகே காதலி பேச மறுத்ததால் வாலிபர் மதுவில் அரளிவிதை கலந்து குடித்துவிட்டு தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இந்த சம்பவம் குறித்த விவரம் வருமாறு:-

ராஜாக்கமங்கலம் அருகே பூச்சிவிளாகம் பகுதியை சேர்ந்தவர் தங்கராஜ். இவருக்கு சோபின் (வயது 19) என்ற மகனும், ஒரு மகளும் இருந்தனர். சோபின் 10-ம் வகுப்பு படித்துவிட்டு திருமண பந்தல் அலங்கார வேலைக்கு சென்று வந்தார். இவர் இரவு நேரங்களில் வீட்டின் மொட்டை மாடியில் படுத்து தூங்குவது வழக்கம்.

நேற்று முன்தினம் இரவு 7 மணியளவில் வழக்கம் போல் மொட்டை மாடியில் தூங்க சென்றார். நேற்று காலையில் வெகு நேரமாகியும் அவர் கீழே இறங்கி வரவில்லை. இதனால், பெற்றோர் அவரை தேடி மொட்டை மாடிக்கு சென்றனர். அப்போது, அவர் படுத்திருந்த கட்டிலில் ஒரு மது பாட்டிலும், அதன் அருகே அரளி விதை துண்டுகளும் கிடந்தன. ஆனால், சோபினை காணவில்லை.

இதையடுத்து குடும்பத்தினர் அவரை அந்த பகுதியில் தேடினர். அப்போது வீட்டின் பின்பகுதியில் கோழிகளை பாதுகாக்க அமைக்கப்பட்டிருந்த கூடாரத்தில் சோபினின் பிணம் தூக்கில் தொங்கி கொண்டிருந்தது. அவரது இரண்டு கைகளும் பின்னால் கட்டப்பட்ட நிலையில் இருந்தது. இதை பார்த்த பெற்றோர் கதறி அழுதனர்.

இதுகுறித்து போலீசுக்கு தகவல் கொடுக்கப்பட்டது. கன்னியாகுமரி போலீஸ் துணை சூப்பிரண்டு பாஸ்கரன், ராஜாக்கமங்கலம் போலீஸ் இன்ஸ்பெக்டர் மீனா, தடய அறிவியல்துறை உதவி இயக்குனர் ஜீவானந்தம் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று பார்வையிட்டனர். பிணத்தை கைப்பற்றி ஆசாரிபள்ளம் அரசு ஆஸ்பத்திரிக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். தொடர்ந்து வாலிபரின் சாவுக்கான காரணம் குறித்து போலீசார் விசாரணை நடத்தினர். போலீசார் நடத்திய முதற்கட்ட விசாரணையில் கீழ்கண்ட தகவல்கள் தெரிய வந்தன.

சோபின் வெளியூரை சேர்ந்த ஒரு பிளஸ்-2 மாணவியை காதலித்து வந்துள்ளார். கடந்த சில நாட்களாக அந்த மாணவி சோபினுடன் பேசுவதை தவிர்த்து வந்தார். இதனால், சோபின் மனமுடைந்த நிலையில் இருந்தார். அத்துடன் காதலியுடன் எடுத்துக்கொண்ட புகைப்படங்களை முகநூலில் பரப்பியதாக தெரிகிறது. காதலியின் உறவினர்கள் நேற்று முன்தினம் சோபினின் வீட்டுக்கு சென்று தகராறு செய்துள்ளனர்.

இதனால், மனமுடைந்த சோபின் முதலில் மதுவில் அரளிவிதையை கலந்து குடித்துள்ளார். பின்னர், ஒருவேளை நம்மை காப்பாற்றி விடுவார்கள் என நினைத்து தூக்கில் தொங்கியுள்ளார். அவ்வாறு தூக்கில் தொங்கும் போதும் கூட தப்பி விடக்கூடாது என நினைத்து தானாக இரண்டு கைகளையும் பின்னால் கட்டிகொண்டதாக போலீஸ் தரப்பில் கூறப்படுகிறது. மேலும், பிரேத பரிசோதனை முடிவு வந்த பின்புதான் அவரது சாவுக்கு வேறு ஏதாவது காரணம் உண்டா? என்பது தெரிய வரும் என போலீசார் கூறினர். இதுகுறித்து ராஜாக்கமங்கலம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.- source: maalaimalar

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!