ஆக்கி பயிற்சிக்கு சென்ற 2 மாணவிகளுக்கு நடந்த அதிர்ச்சி..!


காரைக்குடி அருகே மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த ஆக்கி பயிற்சி மையத்தின் மேலாளர் உள்பட 2 பேர் கைது செய்யப்பட்டனர்.

காரைக்குடி அருகே பள்ளத்தூர் பகுதியில் ஆக்கி பயிற்சி மையம் ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்த பயிற்சி மையத்தின் மேலாளராக இருக்கும் சங்கர் (வயது 41) என்பவர் தனது வீட்டிலேயே மாணவிகளுக்கு தங்குமிடம், உணவு இலவசமாக வழங்கி ஆக்கி பயிற்சி அளித்து வந்தார்.

இதனை கேள்விப்பட்ட மதுரையைச் சேர்ந்த ஒருவர் 9 மற்றும் 10-ம் வகுப்பு படிக்கும் தனது 2 மகள்கள் ஆக்கி விளையாட்டில் ஆர்வமாக இருந்ததால் அவர்கள் இருவரையும் காரைக்குடி பகுதியில் உள்ள பள்ளியில் படிக்க வைத்து சங்கரின் ஆக்கி பயிற்சி மையத்தில் சேர்த்து விட்டார்.

இதனால் அந்த 2 மாணவிகளும் சங்கரின் வீட்டிலேயே தங்கி அவரது பயிற்சி மையத்தில் ஆக்கி பயிற்சி பெற்று வந்தனர். இந்த நிலையில் மேலாளர் சங்கர் (41) அந்த 2 மாணவிகளுக்கும் வீட்டில் வைத்து பாலியல் தொல்லை கொடுத்ததாக தெரியவருகிறது. இதற்கு அவரது உதவியாளர் கண்ணன் (51) என்பவரும் உடந்தையாக இருந்தாராம்.

இதைத் தொடர்ந்து தங்களது சொந்த ஊருக்கு சென்ற 2 மாணவிகளும் சங்கரின் பாலியல் தொல்லை குறித்து பெற்றோரிடம் கூறினர். இதனால் அதிர்ச்சி அடைந்த அவர்கள் சிவகங்கை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ரோஹித்நாதனிடம் புகார் அளித்தனர். இதைத் தொடர்ந்து காரைக்குடி மகளிர் போலீசார் விசாரணை நடத்தி, சங்கர், கண்ணன் ஆகிய இருவர் மீதும் போக்சோ, கொலை மிரட்டல் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து அவர்கள் இருவரையும் கைது செய்தனர்.- source: maalaimalar

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!