குடையால் மூடிய ஊழியரின் சடலம்… ஜோராக நடந்த வியாபாரம் – பிரேசிலில் அதிர்ச்சி


பிரேசிலில் மிகப்பெரிய பிரபலமான உள்ளூர் நிறுவனங்களில் ஒன்று கேரிஃபோர் எஸ்.ஏ. இதன் துணை நிறுவனம் ஒன்றுக்கு சம்பந்தப்பட்ட கடை ஒன்றில் ஒரு நபர் இறந்தபிறகும் உடலை அகற்றாமல் கடையையும் மூடாமல் கடைக்குள்ளேயே குடையால் மூடிவைத்திருந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஆகஸ்ட் 14ஆம் தேதி நடந்த இந்த சம்பவம் இந்த வாரம் ஆகஸ்ட் 19ஆம் தேதிதான் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. இதனால் சமூக ஊடகங்களில் பெரும் விமர்சனங்கள் எழுந்துள்ளன.

கேரிஃபோர் தந்த அறிக்கையின்படி, அந்த நபர் விற்பனை மேலாளராக பணிபுரிந்து வந்திருக்கிறார். அவருக்கு கடைக்குள் இருக்கும்போதே உடல்நலக்குறைவு ஏற்பட்டிருக்கிறது. முதலுதவி அளிக்கப்பட்டு, ஆம்புலன்ஸ் வரவழைக்கப்பட்டுள்ளது. ஆனால் அதற்குமுன்பே அவர் இறந்துவிட்டார். உடலை அகற்றக்கூடாது என்ற நிர்வாக வழிகாட்டுதலைக் கடைபிடித்துள்ளனர். ஆனால் கடையை மூடாமல் வைத்ததற்காக மன்னிப்பு கேட்பதாக கூறியுள்ளது.

மேலும் அந்த நபரின் குடும்பத்தினரிடம் மன்னிப்புக் கோருவதாகவும், எந்த வகையிலும் அவர்களுக்கு ஆதரவு கொடுக்கவும் தயராக இருப்பதாக அந்த அறிக்கையில் தெரிவித்துள்ளது.

பிரேசிலின் கேரிஃபோர் நிறுவனத்தில் இதுபோன்ற சம்பவங்கள் நடப்பது இது முதல்முறை அல்ல. 2018ஆம் ஆண்டில் இதன் ஒரு கடை பாதுகாப்பு காவலர் தெரு நாய் ஒன்றை இருப்பு கம்பியால் அடித்துக்கொன்ற சம்பவம் அப்போது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.- source: puthiya.thalaimurai

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!