பண தகராறில் கழுத்தை இறுக்கி தாய்க்கு நடந்த கொடூரம்.. புதுமாப்பிள்ளை சிக்கியது எப்படி..?


வெளிநாட்டுக்கு வேலைக்கு சென்று சம்பாதித்து கொடுத்த பணத்தை திரும்பக் கேட்ட தகராறில் பெற்ற தாயை கழுத்தை இறுக்கி கொலை செய்த புதுமாப்பிள்ளை கைது செய்யப்பட்டார். பாகூர் அருகே நடந்த இந்த பயங்கர சம்பவம் பற்றிய விவரம் வருமாறு.

புதுவை மாநிலம் பாகூர் அருகே உள்ள கரையாம்புத்தூர் நேருநகர் மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் ராமலிங்கம். இவரது மனைவி ராணி(வயது50). இவர்களுக்கு சரளா (30) என்ற மகளும், அய்யனார் (27) என்ற மகனும் உள்ளனர். இந்தநிலையில் கருத்து வேறுபாடு காரணமாக கணவரை பிரிந்து ராணி தனது மகன், மகளுடன் தனியாக வசித்து வந்தார்.

இந்தநிலையில் ராணி வீட்டு வேலைக்காக வெளிநாட்டுக்கு சென்றார். அவரது மகள் சரளா கடந்த 2 ஆண்டுகளுக்கு முன் காதல் திருமணம் செய்து கொண்டார். ராணி வெளிநாட்டில் வேலை பார்த்து சம்பாதித்து அனுப்பிய பணத்தில் கரையாம்புத்தூரில் அய்யனார் புதிதாக வீடு கட்டினார். நெல் அறுவடை எந்திரம் ஒன்றை வாங்கி தொழிலும் நடத்தி வந்தார்.

கடந்த ஒரு வருடத்திற்கு முன்பு வெளிநாட்டில் இருந்து கரையாம்புத்தூருக்கு திரும்பினார். கடந்த ஜூலை மாதம் 20-ந்தேதி அய்யனாரும் ஒரு பெண்ணை காதல் திருமணம் செய்து கொண்டார்.

புதிதாக கட்டி இருந்த வீட்டில் ராணி, அய்யனார், அவரது மனைவி ஆகியோர் வசித்து வந்தனர். கடந்த சில நாட்களுக்கு முன் அய்யனாரின் மனைவி தனது தாய் வீட்டிற்கு சென்று விட்டார். தன்னிடம் இருந்த பணத்தை மகள் சரளாவுக்கு கொடுக்க ராணி விரும்பியதாக தெரிகிறது. இதற்கு அய்யனார் எதிர்ப்பு தெரிவித்தார். இதனால் தாய், மகனுக்கு இடையே அடிக்கடி பிரச்சினை இருந்து வந்தது.

இந்தநிலையில் கடந்த 13-ந் தேதி மர்மமான முறையில் ராணி வீட்டில் இறந்து கிடந்தார். இதுகுறித்து தகவல் அறிந்ததும் கரையாம்புத்தூர் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து பிணத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கதிர்காமம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுதொடர்பாக போலீசார் சந்தேக மரணம் என வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.

கொரோனா பரிசோதனை முடிவு வந்தவுடன் ராணியின் உடல் நேற்று பிரேத பரிசோதனை செய்யப்பட்டது. இதில் அவர் கழுத்தை இறுக்கியும், தலையில் அடித்தும் கொலை செய்யப்பட்ட இருப்பது தெரியவந்தது. இதையடுத்து இன்ஸ்பெக்டர் வரதராஜன், சப்-இன்ஸ்பெக்டர்கள் சந்திரசேகரன் ஆகியோர் இந்த வழக்கை கொலை வழக்காக மாற்றி தொடர்ந்து விசாரணை நடத்தினர்.

அப்போது, தனது தாய் ராணியை தம்பி அய்யனார் கொலை செய்து இருக்கலாம் என போலீசில் சரளா தெரிவித்தார். அதன் அடிப்படையில் போலீசார் துப்புதுலக்கியதில் ராணியை, அய்யனார் கொலை செய்தது தெரியவந்தது. இதையடுத்து அவரை போலீசார் கைது செய்தனர்.

தனது தாயை கொலை செய்தது ஏன்? என்பது குறித்து போலீசில் அய்யனார் அளித்த வாக்குமூலம் வருமாறு:-

கடந்த 11-ந் தேதி மதுகுடித்துவிட்டு குடிபோதையில் வீட்டிற்கு வந்தேன். அப்போது எனது தாய் ராணி என்னிடம் சரளா மிகவும் கஷ்டப்படுவதாகவும் அவருக்கு பண உதவி செய்ய வேண்டுமெனவும் கூறினார். அதற்காக அவர் என்னிடம் கொடுத்த பணத்தை திருப்பிக்கேட்டார். தான் தற்போது என்னிடம் பணம் இல்லை என்று கூறினேன். இதனால் எங்களுக்குள் தகராறு ஏற்பட்டது.

இதில் ஆத்திரமடைந்த நான் அவரை கீழே தள்ளிவிட்டேன். அப்போது தலையில் அடிபட்டு எனது தாய் மயங்கினார். பின்னர் வீட்டில் இருந்த மின்சார வயரால் அவரின் கழுத்தை இறுக்கி கொலை செய்தேன். யாருக்கும் என் மீது சந்தேகம் வராமல் இருக்க அவரது பிணத்தை வீட்டிற்குள்ளேயே போட்டு விட்டு உள்பக்கமாக பூட்டினேன்.

பின்னர் சிதம்பரத்தில் நான் வேலை செய்யும் இடத்திற்கு சென்றுவிட்டேன். இந்தநிலையில் அக்கம்பக்கத்தினர் எனக்கு போன் செய்து தாயார் வீட்டில் இறந்து கிடப்பதாக தெரிவித்தனர். எனவே நான் எதுவும் தெரியாதது போல் வீட்டிற்கு திரும்பினேன். ஆனால் பிரேத பரிசோதனை முடிவில் எனது தாய் கொலை செய்யப்பட்டிருப்பது அம்பலமானது. எனது தாயை கொலை செய்துவிட்டு எதுவும் தெரியாததுபோல் நான் நாடகமாடியதை போலீசார் கண்டுபிடித்துவிட்டனர். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

கைதான அய்யனாரை கொரோனா பரிசோதனைக்காக கதிர்காமம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் போலீசார் சேர்த்தனர். பரிசோதனை முடிவு வந்ததும் அவரை கோர்ட்டில் ஆஜர்படுத்தி காலாப்பட்டு சிறையில் அடைக்க உள்ளனர். பணத்திற்காக பெற்ற தாயை மகனே கொலை செய்த சம்பவம் கரையாம்புத்தூர் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.- source: dailythanthi

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!