கொரோனாவை கண்டறிய உமிழ்நீர் மூலம் எளிய சோதனை..!


உமிழ்நீர் மூலம் கொரோனா வைரசை கண்டறியும் எளிய சோதனை, அமெரிக்காவில் அறிமுகம் ஆகிறது.

உலக அளவில் கொரோனா வைரஸ் தொற்றின் ஆதிக்கத்துக்கு மிக மோசமாக ஆளாகியுள்ள நாடாக அமெரிக்கா விளங்குகிறது. அங்கு இதுவரை 53.61 லட்சம்பேர் பாதிப்புக்கு ஆளாகி இருக்கின்றனர். 1.69 லட்சம் பேர் உயிரிழந்தும் உள்ளனர்.

கொரோனாவை கண்டறியும் சோதனை, பிற நாடுகளை விட அமெரிக்காவில் அதிக எண்ணிக்கையில் நடத்தப்படுகிறது. உலகிலேயே அதிக எண்ணிக்கையிலான மாதிரிகள் அங்குதான் பரிசோதிக்கப்படுகின்றன. இதனால் அங்கு பரிசோதனை கருவிகளுக்கு அவ்வப்போது தட்டுப்பாடு நிலவி வருகிறது.

இந்த நிலையில், கொரோனா பரிசோதனைகளை அமெரிக்காவில் விரைவாக விரிவாக்குவதற்காக எளிதாக உமிழ்நீர் மூலம் கண்டறிகிற ‘சலிவா டைரக்ட்’ என்ற சோதனை முறையை உருவாக்கி உள்ளனர்.

இந்த பரிசோதனை முறை, யேல் பல்கலைக்கழகத்தின் மருத்துவக்கல்லூரி விஞ்ஞானிகளான நாதன் குருபாக் மற்றும் அன்னே வில்லி ஆகியோரால் முன்னெடுக்கப்பட்டது.

இந்த சோதனை முறையை அங்கு அறிமுகம் செய்வதற்கு அமெரிக்க உணவு மற்றும் மருந்துகள் நிர்வாகம் அனுமதித்து விட்டது.

இதுபற்றி உணவு மற்றும் மருந்துகள் நிர்வாக ஆணையர் ஸ்டீபன் ஹான் கூறும்போது, “இந்த பரிசோதனை முறை கொரோனா பரிசோதனை செயல்திறனை அதிகரிக்கும். பரிசோதனை கருவிகளின் உதிரி பாகங்கள் பற்றாக்குறையை இது தவிர்க்கும்” என குறிப்பிட்டார்.

இதற்கு முன்பும் கொரோனாவை கண்டறிவதற்கு உமிழ்நீர் மாதிரியை எடுத்து சோதிக்கும் 4 சோதனைகளுக்கு அமெரிக்க உணவு மற்றும் மருந்துகள் நிர்வாகம் அனுமதி அளித்து இருந்தது என்பது நினைவுகூரத்தக்கது. ஆனால் அந்த சோதனை முடிவுகள் மாறுபட்டதாக அமைந்து விட்டன.

இப்போது அறிமுகம் ஆகிற ‘சலிவா டைரக்ட்’ என்ற சோதனை முறை, அமெரிக்க தேசிய கூடைப்பந்து சங்கத்தின் வீரர்கள், ஊழியர்களை சோதிக்கும் திட்டத்தின் கீழ் அறிகுறியற்ற நபர்களுக்கான சோதனையாக அமையும்.

இந்த புதிய சோதனையின் சிறப்பம்சம், சோதனை எளிமையானது, செலவு குறைவானது, வழக்கமான கொரோனா பரிசோதனை முறைகளை விட சிறந்ததாகும். இதன்மூலம் கிடைக்கிற முடிவுகள் துல்லியமானதாகவும் இருக்கிறதாம். அமெரிக்க உணவு மற்றும் மருந்துகள் நிர்வாகத்தின் அவசர கால பயன்பாட்டு அங்கீகாரத்துடன் புதிய சோதனையை பயன்படுத்த விரும்பும் பிற பரிசோதனைக்கூடங்களுக்கு இந்த சோதனை முறை உடனடியாக கிடைக்கிறது. இது அமெரிக்கா முழுவதும் வரும் வாரங்களில் பயன்பாட்டுக்கு வரும் என விஞ்ஞானிகள் கூறுகிறார்கள்.

இந்த பரிசோதனை முறை குறித்து விஞ்ஞானி அன்னே வில்லி கூறுகையில், “உமிழ் நீர் விரைவாகவும், எளிதாகவும் சேகரிக்கப்படுவதால் இது கொரோனா வைரஸ் தொற்றினை கண்டறியும் போக்கிலேயே மிகப்பெரிய திருப்பத்தை ஏற்படுத்தும் என்று நாங்கள் உணர்ந்துள்ளோம்” என குறிப்பிட்டார்.

இந்த சோதனையை பரவலாக்க ஏற்ற வகையில் நேரத்தையும், செலவையும் மேலும் குறைக்க தயார் என்று கண்டறிந்துள்ள விஞ்ஞானிகள் குழு கூறி இருப்பது குறிப்பிடத்தக்கது.- source: maalaimalar

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!