திருமணமாகி 6 ஆண்டுகள்… பள்ளி ஆசிரியை விபரீத முடிவு – மாயமான 8 மாத குழந்தை..!


காதல் கணவருடன் ஏற்பட்ட தகராறில் ஏரியில் குதித்து பள்ளி ஆசிரியை தற்கொலை செய்து கொண்டார். மாயமான 8 மாத குழந்தையை போலீசார் தேடி வருகின்றனர்.

ஆவடியை அடுத்த சேக்காடு, டி.ஆர்.ஆர். நகர், திருவள்ளுவர் தெருவைச் சேர்ந்தவர் பாலாஜி (வயது 30). டைல்ஸ் ஒட்டும் தொழில் செய்து வருகிறார். இவருடைய மனைவி புவனேஸ்வரி (25). இவர்கள் இருவரும் காதலித்து 6 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் செய்து கொண்டனர்.

இவர்களுக்கு இளவரசி (5), நிக்கிதா (3), தபித்தாள் (8 மாதம்) என 3 மகள்கள். ஆசிரியர் பயிற்சி படிப்பு முடித்துள்ள புவனேஸ்வரி, அங்குள்ள தனியார் மழலையர் பள்ளியில் ஆசிரியையாக பணிபுரிந்து வந்தார்.

பாலாஜி அடிக்கடி கெட்ட வார்த்தைகளால் புவனேஸ்வரியை திட்டியதாக கூறப்படுகிறது. இதனால் கணவன்- மனைவி இடையே அடிக்கடி பிரச்சினை ஏற்பட்டு வந்தது. கடந்த பிப்ரவரி மாதம் புவனேஸ்வரி கணவருக்கு கடிதம் எழுதிவிட்டு தற்கொலைக்கு முயன்றதாக தெரிகிறது. அதன்பிறகு சமாதானம் ஆகி கணவருடன் சேர்ந்து வாழ்ந்து வந்தார்.

கடந்த வாரம் கணவருடன் மீண்டும் ஏற்பட்ட தகராறில் புவனேஸ்வரி 23-ந் தேதி ஆங்கிலத்தில் ஒரு கடிதம் எழுதி வைத்து விட்டு தனது 8 மாத குழந்தையுடன் 25-ந் தேதி வீட்டிலிருந்து மாயமானார். இதனால் அதிர்ச்சி அடைந்த பாலாஜி, தனது மனைவி மற்றும் குழந்தையை காணவில்லை என ஆவடி போலீசில் புகார் கொடுத்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து மாயமான தாய்-மகளை தேடி வந்தனர்.

இந்தநிலையில் சேக்காடு பாலாஜி நகர் அருகே கோவிந்தன் தாங்கல் ஏரியில் நேற்று காலை மாயமான புவனேஸ்வரி பிணமாக மிதந்தார். ஆவடி போலீசார் மற்றும் ஆவடி தீயணைப்பு நிலைய வீரர்கள் விரைந்து சென்று புவனேஸ்வரி உடலை மீட்டனர்.

கணவருடன் ஏற்பட்ட தகராறில் விரக்தி அடைந்த புவனேஸ்வரி, தனது குழந்தையுடன் ஏரியில் குதித்து தற்கொலை செய்து இருக்கலாம் என தெரிகிறது. ஆனால் அவர் தூக்கிச்சென்ற 8 மாத குழந்தையை காணவில்லை. தீயணைப்பு வீரர்கள் குழந்தையின் உடலை ஏரியில் தேடினர். ஆனால் கிடைக்கவில்லை.

இதுகுறித்து ஆவடி போலீசார் வழக்குப்பதிவு செய்து புவனேஸ்வரி உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக சென்னை கீழ்ப்பாக்கம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் மாயமான 8 மாத குழந்தையை தேடி வருகின்றனர். அந்த குழந்தையை அவர் வேறு யாரிடமாவது கொடுத்து விட்டு தான் மட்டும் ஏரியில் குதித்து தற்கொலை செய்தாரா? என்ற கோணத்திலும் போலீசார் விசாரித்து வருகின்றனர்.

மேலும் புவனேஸ்வரிக்கு திருமணமாகி 6 ஆண்டுகளே ஆவதால் இதுபற்றி ஆர்.டி.ஓ. விசாரித்து வருகிறார்.-Source: maalaimalar

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!