போயஸ் கார்டன் இல்லத்தை சட்டரீதியாக மீட்டெடுப்பேன்.. ஜெ.தீபா உறுதி.!


ஜெயலலிதாவின் போயஸ் கார்டன் இல்லத்தை அரசுடைமை ஆக்கியதற்கு எதிராக மேல்முறையீடு செய்ய உள்ளதாக அவரது வாரிசான ஜெ.தீபா தெரிவித்தார்.

மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவின் போயஸ் கார்டன் இல்லத்தை (வேதா நிலையம்) நினைவு இல்லமாக மாற்றுவதற்கு தமிழக அரசு முடிவு செய்து அதற்கான நடவடிக்கைகளை தீவிரப்படுத்தியது. இதற்கு எதிராக ஜெயலலிதாவின் அண்ணன் மகள் தீபா, அண்ணன் மகன் தீபக் ஆகியோர் வழக்கு தொடர்ந்துள்ளனர்.

இந்த வழக்குகள் நிலுவையில் உள்ள நிலையில், ஜெயலலிதா நினைவு இல்லம் அமைப்பதற்கான நிலம் கையகப்படுத்த இழப்பீட்டு தொகையை சென்னை சிவில் நீதிமன்றத்தில் தமிழக அரசு செலுத்தி உள்ளது. இழப்பீட்டு தொகையை செலுத்தியதால் அரசுடைமையாக்கப்பட்டுவிட்டதாகவும் கூறி உள்ளது.

ஜெயலலிதாவின் நேரடி வாரிசுகளான ஜெ.தீபா, ஜெ.தீபக் ஆகியோரின் எதிர்ப்பை மீறி, போயஸ் கார்டன் இல்லம் அரசுடைமையாக்கப்பட்டிருப்பதால் அவர்கள் மேல் முறையீடு செய்ய முடிவு செய்துள்ளனர்.

இது முடிவு அல்ல, இனிதான் ஆரம்பம் என்று கூறி உள்ள ஜெ.தீபா, வேதா நிலையத்தை அரசுடைமையாக்க விடமாட்டேன் என்றும், சட்ட ரீதியாக மீட்டெடுப்பேன் என்றும் கூறியிருக்கிறார்.

‘வேதா இல்லத்தை விட்டுத் தரவேண்டும் என ஜெயலலிதா நினைக்கவில்லை. அவர் மரணம் எதிர்பாராதது, இல்லையென்றால் உயில் எழுதி வைத்திருப்பார்’ என்றும் தீபா கூறி உள்ளார்.

ஜெயலலிதாவின் இல்லத்தை அரசுடைமையாக்கியது மகிழ்ச்சியான செய்தி என்றும், வேதா இல்லம் ஃகிப்டாக வந்து என தீபா நினைக்க வேண்டாம் என்றும் புகழேந்தி குறிப்பிட்டுள்ளார். ஜெயலலிதா வாழ்ந்த இல்லத்தை நினைவு இல்லமாக மாற்றாவிட்டால் வரலாறு தங்களை மன்னிக்காது என்று வைகைச் செல்வன் கூறி உள்ளார். -Source: maalaimalar

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!