நடிகர் சுஷாந்த் சிங்கின் இறப்பை தாங்க முடியாமல் 13 வயது சிறுமி விபரீத முடிவு..!


சட்டீஸ்கர் மாநிலத்தில் நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத் தற்கொலை செய்துகொண்டதால் மனமுடைந்த 13 வயது சிறுமி, தானும் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அப்பகுதி மக்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

எம்.எஸ் தோனி படத்தின் கதாநாயகரும் பாலிவுட் திரையுலகின் பிரபல நடிகருமான சுஷாந்த் சிங் ராஜ்புத் கடந்த ஜூன் மாதம் 14ஆம் தேதி மும்பையில் தனது இல்லத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இந்த சம்பவம் இந்திய திரையுலகை அதிர்ச்சிக்குள்ளாக்கியது. சுஷாந்தின் தற்கொலைக்கு பல்வேறு காரணங்கள் விவாதிக்கப்பட்டு வந்தாலும், மன அழுத்தத்தால் அவர் இதைச் செய்திருக்கலாம் என்றே கருதப்படுகிறது. இது தொடர்பாக மும்பை காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
சுஷாந்த் சிங்கை இழந்த வருத்தத்தில் இருந்து அவர்களின் பெற்றோர்களும் தீவிர ரசிகர்களும் மீண்டு வரமுடியாமல் தவித்து வருகின்றனர். இந்நிலையில் அவ்வாறு சுஷாந்த் சிங்கின் தீவிர ரசிகை ஒருவர் அவரின் இறப்பை தாங்கிக்கொள்ள முடியாமல் தற்கொலை செய்துகொண்டுள்ள சம்பவம் தற்போது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சட்டீஸ்கர் மாநிலம் துர்க் மாவட்டத்தை சேர்ந்த 7ஆம் வகுப்பு படிக்கும் 13 வயதேயான சிறுமி, சுஷாந்த் சிங் ராஜ்புத்தின் தீவிர ரசிகையாக இருந்து வந்துள்ளார்.

கடந்த மாதம் சுஷாந்த் சிங்கின் இறப்புச் செய்தியை கேட்டது முதலே சிறுமி சோகத்தில் மூழ்கியிருந்ததாக கூறப்படுகிறது. மேலும் அவரது வீடியோக்களையும் திரைப்படங்களின் பாடல்களையும் தொடர்ந்து சிறுமி பார்த்து வந்துள்ளார்.

இந்நிலையில் சிறுமியின் பெற்றோர்கள் நேற்று ஒரு வேலையாக வெளியில் சென்றுள்ளனர். அந்த சமயம் பார்த்து வீட்டின் கூரையில் அந்த சிறுமி தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டுள்ளார். இதனை அடுத்து வீடு திரும்பிய பெற்றோர்கள் கதவு மூடப்பட்டிருப்பதை கண்டு வீட்டின் பின்புறம் சென்று பார்க்கையில் மகள் தற்கொலை செய்துகொண்டதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.

இது குறித்து தகவலறிந்து வந்த காவல்துறையினர் சிறுமியின் உடலை மீட்டு பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பிவைத்தனர்.

இதனிடையே இந்த சம்பவம் தொடர்பாக தெரிவித்துள்ள குர்கின் காவல்துறை கண்காணிப்பாளர் பிரசாந்த் தாக்கூர், நடிகர் சுஷாந்த் உலகத்தை விட்டு வெளியேறிவிட்டார், அதனால் தனது வாழ்க்கையை முடித்துக்கொள்வதாக சிறுமி எழுதி வைத்திருந்த தற்கொலைக் கடிதம் ஒன்றை நாங்கள் மீட்டுள்ளோம். இந்த வழக்கை அனைத்து கோணங்களிலிருந்தும் விசாரித்து வருகிறோம், மேலும் அந்த பெண்ணின் கையெழுத்து பொருந்துகிறதா எனவும் ஆராய்ந்து வருவதாக தெரிவித்துள்ளார்.

சுஷாந்த் சிங் ராஜ்புத் இறப்பை தாங்கிக்கொள்ள முடியாமல் சிறுமி ஒருவர் தற்கொலை செய்துகொண்டுள்ள சம்பவம் அப்பகுதி மக்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது..-Source: dinamaalai

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!