நடத்தையில் சந்தேகம்… மனைவியை கொன்று டிரைவர் எடுத்த விபரீத முடிவு..!


நடத்தையில் ஏற்பட்ட சந்தேகத்தில் மனைவியை கொன்ற டிரைவர், தானும் தற்கொலை செய்துகொண்டார்.

காஞ்சீபுரம் எண்ணெய்க்கார தெருவைச் சேர்ந்தவர் தேவிபிரசாத் (வயது 47). கார் டிரைவர். இவருடைய மனைவி சரஸ்வதி (37). இவர், அதே தெருவில் வீட்டு வேலை செய்து வந்தார். இவர்களுக்கு 3 மகன்கள் உள்ளனர். தேவிபிரசாத் தினமும் மது குடித்துவிட்டு வீட்டுக்கு வந்து மனைவியை அடித்து துன்புறுத்தி வந்ததாக தெரிகிறது.

மேலும் வீட்டு வேலைக்காக செல்லும் மனைவியின் நடத்தையிலும் சந்தேகப்பட்டார். இதனால் கணவன், மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது. நேற்று முன்தினம் இரவும் அவர்களுக்குள் மீண்டும் தகராறு ஏற்பட்டது. இதில் ஆத்திரம் அடைந்த தேவிபிரசாத், வீட்டில் இருந்த சுத்தியலால் மனைவி சரஸ்வதியை தாக்கினார்.

மேலும் ஆத்திரம் அடங்காமல் அவரது கழுத்தையும் இறுக்கி கொலை செய்தார். பின்னர் சமையலறைக்கு சென்ற தேவிபிரசாத் அங்கு மின்விசிறிக்கான கொக்கியில் தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டார். இது குறித்து சின்னகாஞ்சீபுரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.-Source: dailythanthi

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!