குடும்பத்தகராறில் சிறுவன் குத்திக்கொலை.. தாய்மாமனின் வெறிச்செயல் அம்பலம்..!


சென்னையை அடுத்த ஆவடி பக்தவச்சலபுரம் முதல் தெருவை சேர்ந்தவர் சேவியர். இவரது மகன் பாலாஜி (வயது 17). ஆவடியில் உள்ள தனியார் நிறுவனத்தில் ஒப்பந்த தொழிலாளியாக வேலைபார்த்து வந்தார். பாலாஜியின் தாய்மாமா பிரான்சிஸ் சேவியர் (50). இவர் அதே பகுதியில் வசித்து வருகிறார்.

கடந்த சில நாட்களாக பாலாஜி குடும்பத்திற்கும், பிரான்சிஸ் சேவியர் குடும்பத்திற்கும் இடையே பிரச்சினை இருந்து வந்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில் நேற்று இரவு தனது தந்தையிடம் தகராறில் ஈடுபட்ட பிரான்சிஸ் சேவியரிடம், பாலாஜி தட்டிக்கேட்டார்.

இதனால் ஆத்திரமடைந்த பிரான்சிஸ் சேவியர் தான் மறைத்து வைத்திருந்த கத்தியால் பாலாஜியை சரமாரியாக குத்திவிட்டு தப்பிச்சென்றார். இதில் ரத்த வெள்ளத்தில் சரிந்த பாலாஜி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

இதுகுறித்து தகவல் அறிந்து வந்த ஆவடி போலீசார் பாலாஜியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக சென்னை கீழ்ப்பாக்கம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இதுதொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து பிரான்சிஸ் சேவியரை வலைவீசி தேடி வருகின்றனர்.-Source: dailythanthi

* இந்த பதிவு உங்களுக்கு பயனுள்ளதாக இருந்தால், உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!