காதல் விவகாரத்தில் ஒரே குடும்பத்தில் 3 பேர் தற்கொலை… அதிர வைத்த காரணம்..!


நெல்லை மாவட்டம் வாசுதேவநல்லூர் அருகே உள்ள சங்குபுரத்தை சேர்ந்தவர் பழனி. இவரது மனைவி சீதை (வயது 55). இவர்களுக்கு சொர்ணமாரி (25), பத்மா (23) ஆகிய 2 மகள்கள் இருந்தனர். கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு பழனி இறந்து விட்டார். சொர்ணமாரி அப்பகுதியில் உள்ள தபால் நிலையத்தில் ஊழியராக பணியாற்றி வந்தார்.

இவர் பள்ளி படிப்பு படிக்கும் போது பனையூரை சேர்ந்த தனியார் பஸ் கண்டக்டர் வேலுச்சாமி என்பவருடன் பழக்கம் ஏற்பட்டது. நாளடைவில் அது காதலாக மாறியது. கடந்த 10 ஆண்டுகளாக இருவரும் காதலித்து வந்தனர்.

இந்நிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு சீதை தனது மகள் சொர்ணமாரிக்கும், அவரது காதலன் வேலுச்சாமிக்கும் திருமணம் செய்து வைக்க முடிவு செய்தார். இதையடுத்து சீதை, வேலுச்சாமி வீட்டிற்கு சென்று திருமணம் குறித்து பேசினாராம். அப்போது வேலுச்சாமி இன்னும் சில மாதங்களில் சொர்ணமாரியை திருமணம் செய்து கொள்கிறேன். விரைவில் நிச்சயதார்த்தம் வைத்துக்கொள்வோம் என கூறி உள்ளார்.

இதனால் மகளுக்கு விரைவில் திருமணம் நடத்தி வைத்து விடலாம் என்ற நிம்மதியுடன் சீதை வீடு திரும்பினார். ஆனால் மாதங்கள் பல கடந்தும் வேலுச்சாமி திருமணம் குறித்து பேசாமல் இழுத்தடித்து வந்துள்ளார். இதனால் சொர்ணமாரி, அவரது தாய் சீதை ஆகியோர் மனமுடைந்த நிலையில் இருந்து வந்துள்ளனர்.


இதற்கிடையே வேலுச்சாமியிடம் அவரது பெற்றோர் நீ சொர்ணமாரியை தான் திருமணம் செய்து கொள்ள வேண்டும் என கூறி உள்ளனர். இதையடுத்து சில நாட்களில் வேலுச்சாமி குடும்பத்தினர் சொர்ணமாரி வீட்டிற்கு வந்து நிச்சயதார்த்தம் செய்துள்ளனர். பின்னர் சில நாட்களில் சொர்ணமாரியை சந்தித்த அவரது காதலன் இப்போது நான் உன்னை திருமணம் செய்ய மாட்டேன் என கூறி விட்டு சென்னைக்கு சென்று விட்டாராம்.

இதனால் மனவேதனையடைந்த சொர்ணமாரி, தனது தாய் சீதை, தங்கை பத்மா ஆகியோருடன் தற்கொலை செய்ய முடிவு செய்துள்ளார். அதன்படி நேற்று இரவு அவர்கள் 3 பேரும் வீட்டில் வி‌ஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டனர். இன்று காலை வெகுநேரமாகியும் சீதையின் வீடு திறக்கப்படாததால் அக்கம் பக்கத்தினர் ஜன்னல் வழியே எட்டி பார்த்தனர்.

அப்போது அங்கு தாய் உள்பட 3 பேரும் வி‌ஷம் குடித்து பிணமாக கிடப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். இது குறித்து தகவலறிந்த வாசுதேவநல்லூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் மாரீஸ்வரி தலைமையிலான போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து பார்வையிட்டனர். பின்னர் தற்கொலை செய்து கொண்ட 3 பேரின் உடல்களையும் மீட்டு பிரேத பரிசோதனைக்காக சிவகிரி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

இச்சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிந்து 3 பேர் தற்கொலைக்கு காரணமான வேலுச்சாமியிடம் விசாரணை நடத்த போலீசார் முடிவு செய்துள்ளனர். முன்னதாக போலீசார் சீதை வீட்டில் சோதனை நடத்திய போது அங்கு சொர்ணமாரி காதலனுக்கு எழுதிய உருக்கமான கடிதம் சிக்கியது. அதனை கைப்பற்றி போலீசார் விசாரணை தீவிர நடத்தி வருகின்றனர்.

நெல்லை மாவட்டம் அம்பையை சேர்ந்த சீதை குடும்பத்தினர் கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்புதான் சங்குபுரத்தில் குடியேறி உள்ளனர். தற்போது கண்டக்டர் வேலுச்சாமி சென்னையில் தங்கியிருந்து வேலை செய்து வருகிறாராம். அவரை பிடிக்க போலீசார் தீவிர நடவடிக்கை எடுத்து உள்ளனர். காதல் விவகாரத்தில் ஒரே குடும்பத்தில் 3 பேர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியது.-Source: maalaimalar

* இந்த பதிவு உங்களுக்கு பயனுள்ளதாக இருந்தால், உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!