கல்யாணம் செய்வதாக ஆசைவார்த்தை கூறி மாணவியை கடத்திய வாலிபர் சிக்கியது எப்படி..?


திருமணம் செய்வதாக ஆசைவார்த்தை கூறி பிளஸ்-1 வகுப்பு மாணவியை கடத்தி பாலியல் தொந்தரவு கொடுத்த வாலிபர் போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டார். இது குறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-

திருப்பூர் மாவட்டம் மூலனூர் ஆசிரியர் காலனியில் வசித்து வருபவர் பூபதி (வயது 23). இவர் மூலனூர் அருகே உள்ள காதக்கோட்டையில் பால்பண்ணையில் ஊழியராக வேலை செய்து வருகிறார். இவருடைய மனைவி கர்ப்பிணியாக உள்ளார்.

இந்த நிலையில் மூலனூர் அருகே உள்ள ஒரு கிராமத்தை சேர்ந்த பிளஸ்-1 வகுப்பு மாணவியுடன் பூபதி நெருங்கி பழகி வந்தார். அத்துடன் அந்த மாணவியை திருமணம் செய்துகொள்வதாக ஆசைவார்த்தை கூறி வந்தார். இதை உண்மை என்று நம்பிய அந்த மாணவி கடந்த 4 நாட்களுக்கு முன்பு வீட்டில் பெற்றோரிடம் பள்ளிக்கூடத்துக்கு சென்று ஹால்டிக்கெட் வாங்கி விட்டு வருவதாக கூறி சென்றார்.

அதன்பிறகு அந்த மாணவி வீடு திரும்பவில்லை. இதனால் பதறி போன பெற்றோர் உறவினர்கள், நண்பர்கள் வீடுகளில் தேடியும் மாணவி கிடைக்கவில்லை. இது குறித்து மூலனூர் போலீசில் பெற்றோர் புகார் அளித்தனர்.

அந்த புகாரின் பேரில் மூலனூர் இன்ஸ்பெக்டர் பாண்டியம்மாள் மற்றும் தாராபுரம் அனைத்து மகளிர் போலீஸ் நிலைய இன்ஸ்பெக்டர் வனிதாமணி ஆகியோர் கொண்ட தனிப்படை போலீசார் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். இந்த நிலையில் ஈரோடு மாவட்டம் கொடுமுடி போலீஸ் நிலையத்தில் சந்தேகத்திற்கு இடமான வகையில் இளம்பெண்ணுடன் வாலிபர் ஒருவர் இருப்பதாக மூலனூர் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து அங்கு சென்று அவர்களை பிடித்து விசாரித்த போது மூலனூர் பகுதியை சேர்ந்த காணாமல் போன பிளஸ்-1 வகுப்பு மாணவியும், வாலிபர் பூபதியும் என தெரிய வந்தது. பூபதி திருமண ஆசைவார்த்தை கூறி மாணவியை கடத்தி சென்று அவருக்கு பாலியல் தொந்தரவு கொடுத்தது போலீஸ் விசாரணையில் தெரிய வந்தது.

இதையடுத்து மாணவியை மருத்துவ சோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு போலீசார் அனுப்பி வைத்தனர். இது தொடர்பாக பூபதியை போக்சோ சட்டத்தின் கீழ் போலீசார் கைது செய்தனர். பின்னர் கைதான பூபதி திருப்பூர் மகிளா கோர்ட்டில் ஆஜர்படுத்தி கோவை சிறையில் அடைத்தனர்.-Source: dailythanthi

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!