ஒரே நாளில் 357 பேர் மரணம்… இந்தியாவில் 8000-ஐ தாண்டிய கொரோனா உயிரிழப்பு


இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 2.86 லட்சமாக அதிகரித்துள்ள நிலையில், 8102 பேர் உயிரிழந்துள்ளனர்.

இந்தியாவில் கொரோனா வைரஸ் வேகமாக பரவி வருகிறது. ஊரடங்கு கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டு, பொதுவெளியில் மக்கள் நடமாட்டம் அதிகரித்திருப்பதாலும், பரிசோதனைகளை அதிகரிப்பதாலும் தொற்று உறுதி செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து உயர்கிறது. அதேசமயம் குணமடைந்தவர்களின் எண்ணிக்கை உயர்ந்து வருவது ஆறுதல் அளிப்பதாக உள்ளது.

இந்நிலையில், இன்று காலை மத்திய சுகாதாரத்துறை வெளியிட்ட தகவலின்படி இந்தியாவில் மொத்தம் 286579 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக 9996 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதுவரை இல்லாத அளவில் நேற்று மட்டும் 357 பேர் மரணம் அடைந்துள்ளனர். இதன்மூலம் கொரோனா வைரசால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 8102 ஆக உயர்ந்துள்ளது. உயிரிழப்பு விகிதம் 2.8 சதவீதமாக உள்ளது.

இதுவரை 141029 பேர் கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்துள்ளனர். குணமடையும் விகிதம் 49.1 சதவீதமாக உள்ளது. நேற்று மட்டும் 5823 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர். நாடு முழுவதிலும் உள்ள பல்வேறு மருத்துவமனைகளில் 137448 பேர் சிகிச்சை பெற்றுவருகின்றனர்.

அதிகபட்சமாக மகாராஷ்டிராவில் 94041 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் 36841 பேருக்கும், டெல்லியில் 32810 பேருக்கும், குஜராத்தில் 21521 பேருக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.-Source: maalaimalar

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!