மேக்னா ராஜ் கர்ப்பம்.. குழந்தையை பார்க்காமலேயே சென்ற சிரஞ்சீவி சார்ஜா..!


தன் மனைவி மேக்னா ராஜ் கர்ப்பமாக இருக்கும் செய்தியை அறிவிக்க நேரம் பார்த்துக் கொண்டிருந்த நடிகர் சிரஞ்சீவி சார்ஜா இப்படி திடீர் என்று இறந்துவிட்டாரே என நண்பர்கள் தெரிவித்துள்ளனர்.

நடிகர் அர்ஜுனின் உறவினரும், நடிகை மேக்னா ராஜின் கணவருமான கன்னட நடிகர் சிரஞ்சீவி சார்ஜா மாரடைப்பால் உயிர் இழந்தார். அவருக்கு வயது 39.

39 வயதில் சிரஞ்சீவி சார்ஜா மாரடைப்பால் இறந்துவிட்டார் என்பதை நம்ப முடியாமல் ரசிகர்கள் அதிர்ச்சியில் உள்ளனர். போகும் வயதா இது, என்ன அவசரம் என்று அதற்குள் போய்விட்டீர்கள் சிரஞ்சீவி என ரசிகர்களும், திரையுலக பிரபலங்களும், அவருக்கு நெருக்கமானவர்களும் சமூக வலைதளங்களில் தெரிவித்துள்ளனர்.

அர்ஜுனிடம் 4 ஆண்டுகள் உதவி இயக்குநராக வேலை செய்த சிரஞ்சீவி கடந்த 2009ம் ஆண்டு வெளியான வாயுபுத்ரா படம் மூலம் கன்னட திரையுலகில் ஹீரோவாக அறிமுகமானார். அந்த படத்தை சிரஞ்சீவியின் மாமா கிஷோர் சார்ஜா இயக்கியிருந்தார்.

சிரஞ்சீவியும், நடிகை மேக்னா ராஜும் 10 ஆண்டுகள் காதலித்து கடந்த 2018ம் ஆண்டு மே மாதம் 2ம் தேதி திருமணம் செய்து கொண்டனர். மேக்னா தற்போது கர்ப்பமாக இருக்கிறாராம். கர்ப்பம் குறித்து அறிவிப்பு வெளியிட சிரஞ்சீவியும், மேக்னாவும் விரும்பினார்களாம். ஆனால் கர்பத்தின் ஆரம்ப காலம் என்பதால் சற்று பொறுத்திருந்து அறிவிக்கலாம் என்று பின்னர் முடிவு செய்தார்களாம்.

லாக்டவுனால் படப்பிடிப்புகள் இல்லாததால் வீட்டில் இருந்த சிரஞ்சீவி வீட்டு வேலை எல்லாம் செய்திருக்கிறார். விரைவில் தந்தையாகப் போகிறோம் என்கிற சந்தோஷத்தில் நாட்களை கடத்தியுள்ளார். மேலும் ஒர்க்அவுட் செய்து உடம்பை ஃபிட்டாக வைத்துக் கொள்வதில் கூடுதல் கவனம் செலுத்தி வந்தாராம்.


லாக்டவுன் நேரத்தில் சிரஞ்சீவி சந்தோஷமாக இருந்ததை பார்த்து அவரின் குடும்பத்தாரும் மகிழ்ச்சியாக இருந்துள்ளனர். ஆனால் அந்த சந்தோஷம் நிலைக்காமல் போய்விட்டது.

சிரஞ்சீவி பற்றி அவரின் நெருங்கிய நண்பர் ஒருவர் கூறியதாவது,

கடந்த சில நாட்களாக சிரஞ்சீவி படு எனர்ஜியாக இருந்தார். ஃபிட்னஸை சீரியஸாக எடுத்துக் கொண்டிருந்தார். படப்பிடிப்புகள் எப்பொழுது துவங்கும் என்று சிரு காத்திருந்தார். ஞாயிற்றுக்கிழமை மதியம் குடும்பத்தாருடன் சேர்ந்து உணவு சாப்பிட இருக்கையில் இருந்து எழுந்தபோது மயங்கி விழுந்தார். உடனே அவரை அருகில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு சென்றார்கள். ஆனால் அவரை காப்பாற்ற முடியவில்லை என்றார்.

லாக்டவுனின்போது தன் மனைவி மேக்னா ராஜுடன் சேர்ந்து எடுத்த புகைப்படங்களை சிரஞ்சீவி சார்ஜா இன்ஸ்டாகிராமில் வெளியிட்டு வந்தார். அந்த புகைப்படங்களில் இருவரும் மகிழ்ச்சியாக காணப்பட்டார்கள். சிரஞ்சீவி சார்ஜா இதுவரை 19 படங்களில் நடித்துள்ளார்.

அவர் ராஜமார்தாண்டா என்கிற கன்னட படத்தில் நடித்து முடித்திருந்தார். ராஜமார்தாண்டா படத்தின் போஸ்ட் ப்ரொடக்ஷன் பணிகள் நடந்து வருகிறது. மேலும் அவர் ஏப்ரல் உள்பட 3 படங்களில் நடித்து வந்தார். லாக்டவுன் முடிந்த பிறகு ஷூட்டிங்கிற்கு செல்ல வேண்டும் என்று ஆவலுடன் காத்திருந்த சிரஞ்சீவி சார்ஜா இப்படி இறந்துவிடுவார் என்று நினைத்து கூட பார்க்கவில்லை என்று அவருக்கு நெருக்கமானவர்கள் தெரிவித்துள்ளனர்.

நல்ல ஆரோக்கியமாக இருந்த சிரஞ்சீவிக்கு மாரடைப்பால் மரணம் என்பதை தான் பலராலும் நம்பவே முடியவில்லை.-Source: samayam

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!