மதுவில் விஷம் கலந்து குடித்து நண்பர்கள் 2 பேர் தற்கொலை… அதிர வைத்த காரணம்..!


வேலைக்கு செல்லாததை பெற்றோர் கண்டித்ததால், நண்பர்கள் 2 பேர் மதுவில் விஷம் கலந்து குடித்து தற்கொலை செய்து கொண்டனர்.

தூத்துக்குடி மாவட்டம் குரும்பூர் யோகரத்தினம் நகரைச் சேர்ந்தவர்கள் வேல்முருகன் மகன் பூச்சிமுத்து (வயது 18), பொன்ராஜ் மகன் அஜித்குமார் (22). இவர்கள் 2 பேரும் நண்பர்கள். பூச்சிமுத்து, கோவையில் பால் வியாபாரம் செய்து வந்தார். அஜித்குமார், சென்னையில் கூலி வேலை செய்து வந்தார்.

தற்போது கொரோனா தடுப்பு நடவடிக்கையாக ஊரடங்கு அமலில் உள்ளதால், கடந்த சில மாதங்களுக்கு முன்பு பூச்சிமுத்து, அஜித்குமார் ஆகிய 2 பேரும் தங்களது சொந்த ஊருக்கு வந்தனர். பின்னர் அவர்கள் 2 பேரும் எந்த வேலைக்கும் செல்லாமல், அடிக்கடி ஒன்றாக மது குடித்து வந்தனர். இதனை அவர்களுடைய பெற்றோர்கள் கண்டித்தனர்.

இதனால் மனமுடைந்த பூச்சிமுத்து, அஜித்குமார் ஆகிய 2 பேரும் நேற்று முன்தினம் இரவில் குரும்பூர் ரெயில் நிலையத்துக்கு வடபுறம் உள்ள காலி இடத்தில், மதுவில் குருணை மருந்தை (விஷம்) கலந்து குடித்தனர். இதில் பூச்சிமுத்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

அஜித்குமார் அங்கிருந்து தனது வீட்டுக்கு நடந்து செல்ல முயன்றார். அப்போது அவர் தனது வீட்டின் அருகில் மயங்கி விழுந்து இறந்தார். நள்ளிரவில் நீண்ட நேரமாகியும் வீட்டுக்கு திரும்பி வராததால், பூச்சிமுத்து, அஜித்குமார் ஆகிய 2 பேரையும் அவர்களது குடும்பத்தினர் தேடினர். அப்போது அவர்கள் இருவரும் தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது.

இதுகுறித்து தகவல் அறிந்ததும், குரும்பூர் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர். தற்கொலை செய்த பூச்சிமுத்து, அஜித்குமார் ஆகிய 2 பேரின் உடல்களையும் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருச்செந்தூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். குரும்பூர் அருகே வேலைக்கு செல்லாததை பெற்றோர்கள் கண்டித்ததால், 2 நண்பர்கள் மதுவில் விஷம் கலந்து குடித்து தற்கொலை செய்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.-Source: maalaimalar

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!