பூனைக்கு பால் கொடுத்து அன்பு காட்டும் நாய் – குடகில் வினோதம்..!


பூனைக்கு பால் கொடுத்து அன்பும் காட்டும் நாய், இனம் கடந்து தாய்மையை வெளிப்படுத்தி வருகிறது. இந்த வினோத சம்பவம் குடகில் அரங்கேறி வருகிறது.

பொதுவாக ஒரு வீட்டில் சகோதரர்கள் இடையேயும், சகோதர-சகோதரி இடையேயும் அடிக்கடி சண்டை ஏற்படும். அப்போது பெற்றோர் நாயும், பூனையுமாக ஏன் எப்போதும் சண்டை போடுகிறீர்கள் என்று கேள்வி எழுப்புவது உண்டு. அந்த அளவுக்கு நாய்க்கும், பூனைக்கும் ஒத்துப்போகாது. பூனையை கண்டால் நாய் துரத்தி, துரத்தி கடிக்கும். இதனால் பூனை, நாயை பார்த்தாலே ஓடி ஒளிந்து கொள்ளும்.

ஆனால் கர்நாடக மாநிலம் குடகில் பூனைக்கு பால் கொடுத்து இனம் கடந்த தாய்மையை வெளிபடுத்தி வருகிறது ஒரு நாய். இந்த வினோத சம்பவம் பற்றிய விவரம் வருமாறு:-

குடகு மாவட்டம் விராஜ்பேட்டை தாலுகா நிம்மலே கிராமத்தில் தான் இந்த வினோத சம்பவம் அரங்கேறி வருகிறது. ஆம் அதே கிராமத்தை சேர்ந்த சேத்தங்கடா ஜினி திம்மய்யா என்பவர் வளர்க்கும் நாயும், பூனையும் தான் அன்புக்கு அடிமையாகி ஒன்றாக வளர்ந்து வருகிறது. பூனைக்கு நாய் பால் கொடுத்து தாய்மையை வெளிப்படுத்துகிறது. அதற்கு பதிலாக பூனை, நாய் மீது படுத்துக்கொண்டு கொஞ்சுவது, செல்ல சண்டை போடுவது என தாயும், பிள்ளையும் போல் பாசத்தை வெளிப்படுத்தி வருகின்றன.

இந்த அபூர்வ நிகழ்வை பார்க்க அந்த பகுதி மட்டுமின்றி விராஜ்பேட்டை மற்றும் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்தவர்களும் திம்மய்யாவின் வீட்டுக்கு அடிக்கடி வந்து செல்கிறார்கள். தற்போது இதுதொடர்பான வீடியோ, புகைப்படங்கள் சமூகவலைத்தளங்களில் வைரலாகி காண்போரை ஆச்சரியத்தில் ஆழ்த்தி வருகிறது.-Source: dailythanthi

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!