குளத்தில் மூழ்கி இரு சிறுவர்கள் பலி.. காப்பாற்ற சென்ற பெண்ணும் பலியான சோகம்


மீஞ்சூர் அருகே குளத்தில் மூழ்கி 2 சிறுவர்கள் உட்பட 3 பேர் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

திருவள்ளூர் மாவட்டம் மீஞ்சூர் அருகே குளத்தில் மூழ்கி மூன்று பேர் உயிரிழந்தனர். செங்கழுநீர்மேடு கிராமத்தை சேர்ந்த ஷீலா (21) என்பவர் அருகில் உள்ள குளத்திற்கு துணி துவைப்பதற்காக சென்றுள்ளார்.

அப்போது அவரது உறவினர்களின் குழந்தைகளான ஜெயப்ரகாஷ் (7), குணால் (6) ஆகிய இருவரும் ஷீலாவுடன் குளத்திற்கு சென்றுள்ளனர். ஷீலா துணிகளை துவைத்து கொண்டிருந்த போது சகோதரர்கள் இருவரும் குளத்தில் குளித்துள்ளனர்.

திடீரென இருவரும் தண்ணீரில் மூழ்கி கூச்சலிட்டதால் ஷீலா துணிகளை போட்டுவிட்டு குளத்தில் குதித்து சிறுவர்களை காப்பாற்ற முயன்றுள்ளார். எனினும் சேற்றில் சிக்கி மூவரும் உயிரிழந்தனர்.

தகவலறிந்த கிராம மக்கள் சடலங்களை குளத்திலிருந்து மீட்டனர். பிரேத பரிசோதனைக்காக சடலங்களை பொன்னேரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து காட்டூர் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். ஒரே கிராமத்தில் சகோதரர்களான 2 சிறுவர்கள் உட்பட 3 பேர் உயிரிழந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.-source: oneindia

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!