நிதி நெருக்கடியில் தவித்த டி.வி. நடிகர் தூக்குப்போட்டு தற்கொலை..!


ஊரடங்கால் நிதி நெருக்கடியில் தவித்த டி.வி. நடிகர் தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டார்.

மும்பையை அடுத்த நவிமும்பை கார்கர் பகுதியில் உள்ள ஸ்வப்னாபுர்தி அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வந்தவர் டி.வி. நடிகர் மன்மீத் கிரேவல்(வயது32). இவர் ‘ஆதத் சே மஜ்பூர்’, ‘குல்தீபக்’ போன்ற இந்தி டி.வி. தொடர்களில் நடித்து உள்ளார். நேற்று முன்தினம் இரவு டி.வி. நடிகரின் மனைவி உணவு சமைத்து கொண்டு இருந்தார். அப்போது, மன்மீத் கிரேவல் திடீரென படுக்கை அறைக்குள் சென்றார்.

இந்தநிலையில் நாற்காலி விழுந்த சத்தம்கேட்டு மனைவி அறைக்குள் ஓடிச்சென்று பார்த்தார். அப்போது, மன்மீத் கிரேவல் தூக்கில் தொங்கி கொண்டு இருந்ததை பார்த்து அதிர்ச்சி அடைந்தார். மேலும் உதவி கேட்டு சத்தம் போட்டார்.

இந்தநிலையில் சத்தம் கேட்டு விரைந்த குடியிருப்பு காவலாளிகள் துப்பட்டாவில் தூக்கில் தொங்கி கொண்டு இருந்த டி.வி. நடிகரை மீட்டனர். பின்னர் உடனடியாக அவர் பன்வெலில் உள்ள ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கு டி.வி. நடிகரை பரிசோதித்த டாக்டர் அவர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக கூறினார்.

தற்கொலை செய்து கொண்ட டி.வி. நடிகரின் சொந்த ஊர் பஞ்சாப் மாநிலம் ஆகும். மும்பையில் மனைவியுடன் தங்கியிருந்து டி.வி. தொடர்களில் நடித்து வந்துள்ளார். ஊரடங்கு காரணமாக தொடர்களில் நடிக்க முடியாமல் நிதி நெருக்கடியில் தவித்து உள்ளார். வாங்கிய கடனை திருப்பி செலுத்த முடியாததால் மன அழுத்தத்தில் இருந்துள்ளார். இதன் காரணமாக அவர் படுக்கை அறையில் நாற்காலியில் ஏறி நின்று தூக்கில் தொங்கி உயிரை விட்டது தெரியவந்தது.

இந்த தற்கொலை சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.-Source: maalaimalar

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!