தமிழீழ விடுதலை புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின் புகைப்படம், புலிகளின் இலச்சினை அடங்கிய 2018 புது வருட வாழ்த்துக்களை பேஸ்புக்கில் பதிவு செய்து பகிர்ந்ததாகக் கூறப்படும் இருவரை பயங்கரவாத புலனாய்வுப் பிரிவினர் கைது செய்துள்ளனர்.
பின்னர் நேற்று கொழும்பு மேலதிக நீதிவான் தனுஜா ஜயதுங்க முன்னிலையில் இவர்கள் ஆஜர் செய்யப்பட்டு எதிர்வரும் 17 ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.
புலிகள் இயக்கத் தலைவரின் புகைப்படம், இலச்சினை மற்றும் கருத்துக்கள் ஊடாக தமிழ், சிங்கள மக்களிடையே மோதல், வெறுப்புணர்வு, அமைதியின்மையை ஏற்படுத்த சந்தேக நபர்கள் முனைந்துள்ளதாக பயங்கரவாத புலனாய்வுப் பிரிவினர் குற்றம் சாட்டுகின்றனர்.
இரத்தினபுரியைச் சேர்ந்த நபர் ஒருவர் இரத்தினபுரி சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் புத்திக சிறிவர்தனவுக்கு இந்த பேஸ்புக் விவகாரம் தொடர்பில் முறைப்பாடு செய்துள்ளார். குறித்த நபர் செய்த முறைப்பாடு சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகரினால் பயங்கரவாத புலனாய்வுப் பிரிவினருக்கு விசாரணைகளுக்காக கையளிக்கப்பட்டுள்ளது.
இதன்படி பயங்கரவாத புலனாய்வுப் பிரிவுக்கு பொறுப்பான பதில் சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் ரவி செனவிரத்ன, பிரதிப் பொலிஸ் மா அதிபர் நாலக சில்வா ஆகியோரின் மேற்பார்வையில், பயங்கரவாத புலனாய்வுப் பிரிவின் பதில் பணிப்பாளர் உதவி பொலிஸ் அத்தியட்சகர் டப்ளியூ.ஏ. ஜகத் விஷாந்தவின் ஆலோசனைக்கு அமைய பொலிஸ் பரிசோதகர் கபில தலைமையிலான குழுவினர் இது தொடர்பில் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர். இதனையடுத்தே இந்த இருவரும் கைது செய்யப்பட்டு நேற்று நீதிமன்றில் ஆஜர் செய்யப்பட்டனர்.
அத்துடன், ‘எங்கள் குழுவுக்கு வாருங்கள், எங்கள் புரட்சியுடன் இணையுங்கள்’ என்ற கருத்துப்பட வாசகங்களும் இவர்களில் ஒருவரின் பேஸ்புக் பக்கத்தில் காணப்பட்டுள்ளது.
எதிர்வரும் 17 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள இருவர் தொடர்பிலும் விசேட விசாரணைகளை மேற்கொண்டு நீதிமன்றுக்கு அறிக்கை சமர்ப்பிக்க நீதிவான் நேற்று பயங்கரவாத புலனாய்வாளர்களுக்கு உத்தரவிட் டுள்ளார்.-Source: metronews.lk
* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!