இப்படியொரு பேரழிவை ஏற்படுத்தி விட்டது… டிரம்ப் நிர்வாகம் மீது ஒபாமா தாக்கு..!


அமெரிக்க முன்னாள் ஜனாதிபதி ஒபாமா கொரோனா வைரஸ் தொற்றுநோயை கையாளும் விவகாரத்தில் டிரம்ப் நிர்வாகம், முற்றிலும் குழப்பமான பேரழிவை ஏற்படுத்தி விட்டதாக குற்றம்சாட்டினார்.

அமெரிக்க முன்னாள் ஜனாதிபதி ஒபாமா, தன்னோடு வெள்ளை மாளிகையிலும், தனது நிர்வாகத்திலும் பணியாற்றியவர்களுடன் கடந்த வெள்ளிக்கிழமையன்று இரவு தொலைபேசி வழியாக உரையாடி உள்ளார்.

அப்போது அவர் கொரோனா வைரஸ் தொற்றுநோயை கையாளும் விவகாரத்தில் டிரம்ப் நிர்வாகம், முற்றிலும் குழப்பமான பேரழிவை ஏற்படுத்தி விட்டதாக குற்றம்சாட்டினார்.

மேலும், “கொரோனா வைரஸ் பரவலுக்கு டிரம்ப் நிர்வாகத்தின் மோசமான தடுப்பு நடவடிக்கை, உலகளாவிய நெருக்கடியின்போது அரசாங்கத்துக்கு ஒரு வலுவான தலைமை ஏன் தேவைப்படுகிறது என்பதற்கான முக்கிய நினைவூட்டலாக அமைந்துள்ளது” என்றும் குறிப்பிட்டார்.

கொரோனா வைரசுக்கு எதிராக டிரம்ப் எடுத்து வந்துள்ள நடவடிக்கையில் ஊசலாட்டத்தை காண முடிந்ததாக ஒபாமா சுட்டிக்காட்டி உள்ளார்.

கொரோனா வைரஸ் மறைந்து விடும் என்று டிரம்ப், பிப்ரவரி மாதம் கூறியதாகவும், மார்ச் மத்தியில், இது ஒரு தீவிர பிரச்சினை என ஒப்புக்கொண்டதாகவும், ஒரு சிறந்த அரசாங்கம் இருந்திருந்தால்கூட கொரோனா வைரஸ் விவகாரம் மோசமாகத்தான் இருந்திருக்கும் எனவும் ஒபாமா குறிப்பிட்டதாக தகவல்கள் கூறுகின்றன.-Source: maalaimalar

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!