இந்தியாவில் கொரோனா வைரஸ் தாக்கத்தால் ஒரே நாளில் 195 பேர் மரணம்


இந்தியாவில் கொரோனா வைரஸ் வேகமாக பரவி வருகிறது. ஊரடங்கு உத்தரவு, நோய் அறிகுறி உள்ளவர்களை தனிமைப்படுத்தி சிகிச்சை அளித்தல் உள்ளிட்ட பல்வேறு நோய்த்தடுப்பு நடவடிக்கைகள் தீவிரமாக நடைபெறுகின்றன. தற்போது கொரோனா பாதிப்பு குறைவாக உள்ள பகுதிகளில் ஊரடங்கு தளர்த்தப்பட்டுள்ளது. எனினும் பரிசோதனைகளை அதிகரிக்க அதிகரிக்க, புதிய நோயாளிகளின் எண்ணிக்கையும் உயர்ந்து வருகிறது. உயிரிழப்பும் கணிசமாக உயர்கிறது.

இந்நிலையில் மத்திய சுகாதாரத்துறை இன்று வெளியிட்டுள்ள தகவலின்படி, இந்தியாவில் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை 46 ஆயிரத்தை கடந்துள்ளது. மொத்தம் 46,433 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.


கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 3900 பேருக்கு நோய்த்தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.195 பேர் உயிரிழந்துள்ளனர். இதன்மூலம் கொரோனா வைரசால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 1568 ஆக உயர்ந்துள்ளது. 12727 பேர் கொரோனா பாதிப்பில் இருந்து மீண்டுள்ளனர்.

கொரோனா பாதிப்பில் மகாராஷ்டிரா தொடர்ந்து உச்சத்தில் உள்ளது. மகாராஷ்டிராவில் மொத்தம் 14541 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 583 பலியாகி உள்ளனர். குஜராத்தில் 5804 பேருக்கும், டெல்லியில் 4898 பேருக்கும், தமிழகத்தில் 3550 பேருக்கும், மத்திய பிரதேசத்தில் 2942 பேருக்கும், ராஜஸ்தானில் 3061 பேருக்கும், உத்தர பிரதேசத்தில் 2766 பேருக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. – Source: maalaimalar


* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!